ஊட்டியில் வெளுக்கும் மழை.. சூறாவளிக் காற்று.. மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.. மாணவர் பலி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்குப் பருவமழை எதிரொலியாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றும் பலமாக வீசி வருவதால் பல இடங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புகளும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு மாணவர் மரம் விழுந்து உயிரிழந்துள்ளார். ஊட்டி-யில் தொடர்ந்து 6 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல பகுதிகளில் பல மணி நேரம் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டி நகர மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளது
பலத்த காற்று - மழை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே பலத்த காற்று வீசி வந்த நிலையில் நேற்று இரவு முதல் சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளன. இரவில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
மரம் விழுந்து மாணவன் பலி
இந்த நிலையில் இன்று 'பிங்கர் போஸ்ட்' என்ற பகுதியில் சாலையில் நடந்து சென்ற கல்லுரி மாணவன் இமான் அகஸ்டீன் என்ற மாணவன் மீது மரம் விழுந்து அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவன் உயிரிழந்தார். 18 வயதான அகஸ்டீன், பிங்கர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.
மின் கம்பி விழுந்த மரம்
இதற்கிடையே, இன்று அதிகாலையில் குன்னூர் - கோத்தகிரி சாலையில் மூன்று இடங்களில் மின் கம்பி மீது மரம் விழுந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல கட்டப்பட்டு அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்தும் தடைப்பட்டது.
வீடுகள் சேதம்
இதேபோல குன்னூர் - உதகை மாற்று சாலையில் ஓட்டுப்பட்டரை பகுதியில் ராட்சத மரம் ஒன்று காற்றின் வேகம் தாங்காமல் சாலையில் விழுந்து எதிரே இருந்த வீடு சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அது காங்கிரீட் வீடு என்பதால் வீட்டில் உள்ளவர்கள் உயிர் தப்பினார்.
3 மணி நேர போக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு வந்த காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் தீ அமைப்பு துறையினர் ரம்பத்தால் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதையடுத்து 3 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து காற்று வீசி வருவதால் வாகனங்களை சாலையோரங்களில், மரத்திற்குக் கீழே நிறுத்த வேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
ஊட்டியில் தொடர்ந்து மழை, காற்றுமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலிலும் பாதிப்பு
ஊட்டியைப் போலவே கொடைக்கானலிலும் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மழையுடன் காற்றும் பலமாக இருப்பதால் அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. பேரிஜம் ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.