அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: தெற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 அல்லது 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல கன மழை பெய்து வருகிறது. புதுவையிலும் மழை கொட்டிக் கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தொடங்கி நெல்லை வரை மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழை
தமிழகத்தில் தற்போது வட கிழக்குப் பருவ மழை படு ஜோராக களை கட்டியுள்ளது.

எடுத்த எடுப்பிலேயே
எடுத்த எடுப்பிலேய கன மழையுடன் பருவ காலம் தொடங்கியிருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக மழையே இல்லாமல் வறண்டு போயிருந்த பகுதிகள் குளிர்ந்து வருவதால் மக்கள் உவகையுடன் உள்ளனர்.

பல மாவட்டங்களில் கன மழை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது.

சென்னையில் 4 நாட்களாக
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை கொட்டிக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.

தீபாவளி சேல்ஸ் பாதிப்பு
தொடர் மழை காரணமாக சென்னையிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் தீபாவளி வியாபாரம் பாதித்துள்ளது. இதனால் வியாபாரிகள் சற்றுக் கவலை அடைந்துள்ளனர்.

சற்றும் சளைக்காத ரங்கநாதன் தெரு
ஆனால் சென்னையில் விடாது மழை பெய்தாலும் மக்களும் விடாமல் பர்ச்சேஸில் கலக்கி வருகின்றனர். குறிப்பாக தி.நகர் ரங்கநாதன் தெருவில் வழக்கம் போல கூட்டம் அலை மோதுகிறது.

24 மணி நேரத்தில் கன மழை
இந்த நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை முற்றிலும் விலகாமல் அப்படியே இருப்பதால் அடுத்த 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ரமணன் சொல்வது
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று காலை 8.30 மணி நிலவரப்படி இலங்கைக்கும் தமிழக கடலோர பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் இடையில் நிலை கொண்டுள்ளது.

மேற்கு நோக்கி நகர்கிறது
இது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். எப்போதெல்லாம் மன்னார் வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டிருக்குமோ அப்போதெல்லாம் தமிழகம், புதுச்சேரியில் நல்ல மழை பெய்யும்.

மன்னார் புண்ணியத்தால்
அது போன்று தற்போதும் காற்றழுத்த தாழ்வு நிலை மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளதால் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும்.

விட்டு விட்டு மழை பெய்யும்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும். சில பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் படிப்படியாக மழை குறையும்.

குலேசகரப்பட்டினத்தில் செம மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குலசேகரபட்டினத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மண்டபம் 13 செ.மீ., குடவாசல் 12 செ.மீ., மயிலாடுதுறை, கொள்ளிடம், திருச்செந்தூர், சீர்காழி, கடலூர், பாம்பன், தலைஞாயிறு, காட்டுமன்னார்கோவில் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications