தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகையில் பேய்மழை- புதுச்சேரியிலும் கனமழை- விடுமுறை அறிவிப்பு!
தஞ்சாவூர்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை மூழ்கடித்த கனமழை தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வருகிறது. கடலூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை அடைமழை கொட்டுகிறது. புதுச்சேரியிலும் பெரும்மழை கொட்டி வருகிறது.
வரலாறு காணாத பருவமழையால் தலைநகரம் சென்னையே மூழ்கிப் போய் தனித் தனி தீவுகளானது. இந்த மழை நேற்று முதல் தணியத் தொடங்கியதால் சென்னை நகரில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால் சென்னை புறநகரில் வெள்ளம் உடனடியாக வடிந்து விடாத அளவுக்கு பல அடி உயரத்துக்கு நீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூரில் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் கொட்டிவரும் கனமழையால் கெடிலம் ஆற்றில் 30,000 கனடி நீர் ஓடுகிறது. மேலும் வீராணம் ஏரி வேகமாக நிரம்புவதால் எப்போது வேண்டுமானாலும் ஏரி திறக்கப்படும் நிலை இருக்கிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.