நீலகிரியில் கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை: மதுரையில் கொளுத்தும் வெயில்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. தொடர்ந்து கனமழை நீடிப்பதால் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக முதுமலை பகுதியில் சாலையில் ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் மரத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் ஒருபக்கம் கனமழை பெய்தாலும், ஒருபக்கம் வெயில் வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக திங்கள்கிழமை மதுரையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
ஆழியாறு அணை
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆழியாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் மழை
தற்போது வால்பாறை பகுதியில் பெய்ந்து வரும் கனமழையாலும், கவர்க்கல் பகுதி, சக்தி, தலநார் போன்ற எஸ்டேட் பகுதியில் மழையளவு அதிகரித்தாலும், வனப்பகுதியில் உள்ள சிற்றோடைகளில் தண்ணீர் அதிகம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சோலையாறு அணை
கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு சின்னக் கல்லாறில் இருந்து 2280 கனஅடிக்கும், நீராறில் இருந்து 265.75 அடிக்கும் தண்ணீர் வருகிறது.
நிரம்பிய அணை
இதன் காரணமாக சோலையாறு அணை தனது மொத்த கொள்ளளவான 160 அடியை கடந்த சில தினங்களுக்கு முன் எட்டியது. இதையடுத்து சோலையாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மின் உற்பத்தி
சோலையாறு அணையில் இருந்து வினாடிக்கு 3,330.90 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வால்பாறை மின்நிலையம்-1 இயக்கப்படும் வினாடிக்கு 395.02 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திருப்பி விடப்படுகிறது.
மின்நிலையம்-2 இயக்கப்பட்டு 585.கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தப்படி அந்த தண்ணீர் கேரள அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
அதிகபட்ட மழையளவு
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 190 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தேனி மாவட்டம் பெரியார், வால்பாறையில் தலா 90 மி.மீ, வால்பாறை தாலுகா அலுவலகத்தில் 70 மி.மீ, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 50 மி.மீ தேவலா, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, மனமேல்குடியில் தலா 20 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் புயல் காற்று
இந்த நிலையில் திங்கள்கிழமை வடகிழக்கு திசையிலிருந்து சென்னை மீனம்பாக்கத்தில் மாலை 4.58 மணிக்கு புயல் காற்று வீசியது. சுமார் 55 கி.மீட்டர் வேகத்தில் வீசிய இந்தப் புயல் காற்று 2 நிமிடங்களுக்குப் பின்னர் கடந்து சென்றதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரையில் அனல்
தமிழகத்தில் அதிகபட்சமாக திங்கள்கிழமை மதுரையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியது. அதேபோல் கடலூரில் 101, நாகப்பட்டினம் 100, பாளையங்கோட்டை 98, திருச்சி 101, தூத்துக்குடி 99, வேலூர் 98, சென்னை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.