சென்னைவாசிகளே... இரவில் மழைபெய்யலாம்- எச்சரிக்கும் வானிலை மையம்
ஆந்திரா ராயலசீமா பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம், தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கடந்த வாரங்களில் தெரிவித்தது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த இரு தினங்களாகவே மழை பெய்தது.
சென்னையில் கோயம்பேடு, புரசைவாக்கம், பல்லாவரம், அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல், அசோக்நகர், சோழிங்கநல்லூர், கிண்டி, பரங்கிமலை, விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சென்னை வானிலை மையம்
ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் இருந்து கடலோர கர்நாடகா வரை நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழை பெய்யும்
அதுப்போன்று, தென் தமிழகத்தில் ஓர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் நகரில் மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 7 செ.மீ மழையும்,தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. அதே போல் திருவண்ணாமலை போளூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மதராந்தகத்தில் தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்குப் பருவமழை
சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவத்துள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.