நெல்லை, தூத்துக்குடியில் கொட்டும் மழை: குற்றால அருவிகளில் வெள்ளம்
திருநெல்வேலி: வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரத்தில் கனமழை கொட்டி வருகிறது. குற்றாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்தது. இதனால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பின. விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பின்னர் மழை விட்டு வெயில் அடிக்க தொடங்கியது. காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஒரு வார இடைவெளிக்கு பின்னர் நேற்று முதல் மாவட்டம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருகியது. வாகனஓட்டிகளில் சாலைகளில் மிதந்து சென்றனர்.
பாபாநாசம் அணையில்
பாபநாசம் அணைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் மேலும் அதிகரித்து உள்ளது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 111.50 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் மேலும் ஒரு அடி அதிகரித்து 112.60 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 1840 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 704 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
நிரம்பும் அணைகள்
இதே போல நேற்று 121.23 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 124.21 அடியாக அதிகரித்து உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 80.40 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 74.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 81.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.42 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 106.75 அடியாகவும் உள்ளன.
குற்றாலத்தில் வெள்ளம்
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும் கன மழை பெய்தது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மிதந்து சென்ற வாகனங்கள்
திசையன்விளை பகுதியில் கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் மிதந்து சென்றன. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கன மழை காரணமாக சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
சாய்ந்த மின்கம்பம்
நெல்லை தச்சநல்லூரில் கன மழை காரணமாக மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால் அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
மழை அளவு
அணைப்பகுதியில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 60 மி.மீ., மணிமுத்தாறில் 27.2 மி.மீ., கருப்பாநதியில் 8 மி.மீ., குண்டாறில் 3.1 மி.மீ. பதிவாகி உள்ளது. இதேபோல சேர்மாதேவி 32, பாளை 16, நெல்லை 13, அம்பை 10, ஆய்க்குடி 5.2, தென்காசி 3.2, நாங்குநேரி 1, ஆலங்குளம் 1.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடியில் கொட்டிய மழை
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை 5 மணி முதல் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது. உடன்குடி, திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் பகுதிகளில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மழையால் பாதிக்கப்பட்டனர்.
தண்ணீரில் மிதக்கும் விழுப்புரம்
கனமழை காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது. இதனால், சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணிகள் ஏறிச் செல்கின்றனர். எனவே, பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சாலைகள் சேதம்
மேலும், கீழ்பெரும்பாக்கம் தரைபாலத்திலும் தண்ணீர் தேங்குவதால், அந்த வழியாகச் செல்லும் மக்கள் 2 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளும் சேதமடைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
பொதுமக்கள் குமுறல்
விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறாததே சாலைகளின் இந்த நிலைக்கு காரணம் என பொதுமக்கள் குறை கூறிவருகின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது.