வீடியோகிராபர் டூ முதல்வர் வேட்பாளர் டூ ஜெயில் டூ நீக்கம்.. சசிகலாவின் சறுக்கல் பயணம்!
வீடியோ கடையில் தொடங்கிய வாழ்க்கை முதல்வர் வேட்பாளராக உயர்ந்து இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டள்ளார் வி.கே.சசிகலா.
Recommended Video
சென்னை : திருமணத்திற்குப் பிறகு வீடியோ கடை நடத்தி வந்த சசிகலா, ஜெயலலிதாவின் தோழியாக 33 ஆண்டுகள் கடத்திவிட்டு இறுதியில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.
1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது மகளாக சசிகலா பிறந்தார். இவரின் தாத்தா சந்திரசேகர் அதே ஊரில் மருந்துக்கடை நடத்திவந்தார். அவரது மறைவுக்கு பின் அவரின் மகன் விவேகானந்தன் அக்கடையை கவனித்துக்கொண்டார்.
பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்த சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம் 1950ல் மன்னார்குடிக்கு மாற்றலாகி வந்ததால் விவேகானந்தனின் குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தனர். 1973ல் மக்கள் தொடர்பாளர் என்ற அரசுப்பதவியில் இருந்தவரும் திமுக கட்சியைச் சேர்ந்தவருமான நடராசன் என்பவரை சசிகலா திருமணம் செய்துகொண்டார்.
வீடியோ கடையில் தொடங்கிய வாழ்க்கை
1980 காலகட்டத்தில் நடராஜன் சசிகலாவிற்கு மைலாப்பூர் லஸ் கார்னரில் வினோத் வீடியோ விஷன் என்ற கடை ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தார். சசிகலா இந்த வீடியோ கடை நடத்தி வந்ததன் மூலம் அரசியல் நிகழ்ச்சிகளில் கேமரா ஒளிப்பதிவு செய்து வந்துள்ளார். 1984ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா ஐஏஎஸ்ஆல் ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பதிவு செய்யும் கான்டிராக்ட்டை பெற்றுத் தந்தார். அப்போது அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா இருந்தார்.
நட்பு
அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் சசிகலா ஜெயலலிதா சந்திப்புகள் நட்பாக மாறின. பின்னர் அடிக்கடி போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்று வீடியோ கேசட்டுகளை அளித்து வந்தார் சசிகலா. ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதா தனிமையில் இருந்த சமயத்தில் அவருக்குத் துணையாக போயஸ் கார்டனிலேயே தங்கினார் சசிகலா.
ஜெ.உடனே இருந்தவர்
1987இல் எம். ஜி. ஆர் மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா மற்றும் ஜானகி என இரண்டு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதா பல அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார், சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார்.
செயற்குழு உறுப்பினர்
ஒரு கட்டத்தில் ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா. அந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்தார் சசிகலா. 1991-க்குப் பிறகு அ.தி.மு.க சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர் தேர்வில் சசிகலா முக்கிய பங்கு வகித்தார். அ.தி.மு.க-வில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
சின்னம்மாவான சசிகலா
ஜெயலலிதா ஒரு ஆங்கில பேட்டியில் சசிகலா என் உடன்பிறவாத சகோதரி என்றும் என் தாய்க்கு இணையானவர் என்றும் கூறினார். அதன்பிறகு அதிமுகவினர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பது போல சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கத் தொடங்கினர்.
சொத்துக்குவிப்பு வழக்கிலும் பங்கு
1991-96 தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்கள் பற்றிய வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா, ஜெ. இளவரசி, வி. என். சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது.
தண்டனை
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பையும் தண்டனையும் நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிவித்தார். வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவருடையத் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
1996ல் ஒதுக்கி வைக்கப்பட்டார்
அதன்பிறகு நீதிபதி குமாரசாமி கணக்ககுப்பிழை இருப்பதாகச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா உட்பட நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்.
2011ல் நீக்கம்
இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டில் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த சசிகலா, எம்.நடராஜன், திவாகரன் (மன்னார்குடி), டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன் , வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், மோகன் (அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.
3 மாதத்தில் மன்னிப்பு
இதனையடுத்து சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் இருந்தும் வெளியேறினார். பின்னர் 3 மாத காலத்தில் 2012ல் மார்ச் 28-ம் தேதி சசிகலா தனக்கு அரசியல் ஆசை இல்லை, கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை, எம்.பி. எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை, அமைச்சர் பதவி வேண்டாம் என்று உறுதியளித்து ஜெயலலிதாவிடம் கடிதம் அளித்தார்.
கட்சியில் சேர்ப்பு
இதனையடுத்து மார்ச் 31ல் சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா மற்றவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, டிசம்பர் 29ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.
முதல்வராக ஏற்பாடு
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி சசிகலா அதிமுகவின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக பதவியேற்கும் ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலையில் பிப்ரவரி 14ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து சசிகலா பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
உறவினர்களுக்கு பதவி
சிறை செல்லும் முன்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி. தினகரன் மன்னிப்பு கேட்டதால் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறிவித்து, அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
பொதுச்செயலாளர் பதவி ரத்து
பிப்ரவரி 16ல் சசிகலாவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, 6 மாத அரசியல் விளையாட்டில் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவித்துள்ளனர். இதனால் சசிகலாவின் அரசியல் வாழ்வில் இரண்டாவது முறையாக சறுக்கல் ஏற்பட்டுள்ளது.