மக்களோடு மக்களாக இறங்கி வாங்க ரஜினி... ரசிகர்கள் மட்டுமல்ல, உலகமே உங்கள் வசப்படும்! #RajiniFansMeet
மக்களோடு மக்களாக பழகும் அரசியலே தமிழகத்துக்கு தேவை. அதை ரஜினி புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாமல் இறங்குவது அவருக்கு நல்லது.
Recommended Video

சென்னை: புது கட்சி, கொடி, சின்னம் இப்படி டைம் வேஸ்ட் செய்வதை காட்டிலும் மக்களோடு மக்களாக இறங்கி அதிரடி அரசியலில் ரஜினி குதித்தால்தான் அவருக்கு மக்களின் ஆதரவு சுலபமாககிடைக்கும். இதை ரஜினி உணர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். எதிலும் ஊழல், முறைகேடு என்றே மக்கள் பார்த்து சலித்துவிட்ட நேரத்தில் அத்தனை பேரின் எதிர்பார்ப்புக்கும் எதிராகவே ரஜினியின் தாமதம் இருந்து வந்தது.
1996ல் அவர் முதல் முறையாக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போது இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் அது அவரை நம்பி காத்திருந்த மக்களை ஏமாற்றி விட்டது.

ரஜினி மௌனம் சாதித்தார்
கடந்த 1996-ஆம் ஆண்டு ஏமாற்றமடைந்த மக்கள் அதற்கு அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவார் என்று தொடர்ந்தும் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மௌனமே சாதித்தார். மாறாக திரைப்படங்களிலும் அவரை யாராவது அரசியலுக்கு அழைப்பது போன்றும் அதற்கு அவர் வரும்போது வருவேன் என்ற ரீதியிலான பதிலை தருவது போன்றுமே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

எந்த அரசியல்
கடந்த மே மாதம் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றார். மேலும் போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்றார். போர் வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. எதற்கு இனியும் கால தாமதம். அதுதான் தமிழகத்தில் தலைமை இல்லையே. இறங்கி அடிக்க வேண்டியதுதானே. மக்களோடு மக்களாக பழகும் அரசியலே இனி தேவை.

மக்களோடு மக்களாக...
ரசிகர்கள் என்ற சிறு வட்டத்துக்குள் அடைப்பட்டு விடாமல் மக்களோடு மக்களாக பழக வேண்டும். காமராஜர் உள்ளிட்டோர் எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று வந்தார்கள், வென்றார்கள். அதுபோன்ற ஒரு தலைவராக ரஜினி இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.

மக்கள் பிரச்சினைகள்
1996-ஆம் ஆண்டிலேயே அரசியலுக்கு வந்து விட்டதாக கூறும் ரஜினி, கட்சி, கொடி ஆரம்பிப்பது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு மக்களோடு மக்களாக பயணிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் பிரச்சினைகள் இருக்கும். ஏன் இவர் பிறந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். அவற்றை பட்டியலிட்டு உண்மையான கோரிக்கை நியாயமான கோரிக்கை என்ற பட்சத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியுடன் பேசி தீர்க்கலாம். அதுதான் நிஜமான அரசியல். அதற்கு அவர் மாற வேண்டும்.

ரஜினி வாய்ஸ்
ரஜினி பேசினால் எடுப்படாத பிரச்சினை இருக்க முடியுமா.. சும்மா விரலைச் சுட்டி முடிக்கிற நேரத்தில் தீர்வு ஓடி வராதா என்ன.. அனிதா இறந்ததுமே கூட ரஜினி அதிரடியாக குதித்திருக்கலாம். டெல்லிக்குப் படையெடுத்திருக்கலாம். நீட்டைத் தூக்கு என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கலாம். விவசாயிகள் பிரச்சினைகள், மீனவ பிரச்சினை, காவிரி பிரச்சினை, நதி நீர் இணைப்பு ஆகியவற்றுக்கு இவர் இன்னும் வேகமாக குரல் கொடுத்திருக்கலாம்.

மகாபாரத கதை
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் அறிவுறுத்துவார். அதில் உன் எதிரில் நிற்பர் உனது சகோதரனாக இருந்தாலும் அவரை எதிரியாகத்தான் பார்க்க வேண்டும். அதுபோல் மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் நண்பர்களாக இருந்தாலும், எதிர்த்து நின்றால் எதிரிதான் என்று மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். ரஜினியே ஒரு சிம்பல்தான். தனியாக கட்சி, கொடி எதற்கு. "போர்" வர இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அதுவரை கட்சியே ஆரம்பிக்காமல் மக்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தால் எப்படி தலைவரே.. இது ரசிகர்களின் நிஜமான ஆதங்கம்.
இறங்கி வாங்க தலைவரே.. மக்கள் உங்க பின்னாடி வருவாங்க!












Click it and Unblock the Notifications