குடி போதையில் தங்கையை ஆபாசமாகத் திட்டிய தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு ஜாமீன்
சென்னை: குடிபோதையில் தங்கையை ஆபாசமாகத் திட்டிய தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி குடி போதையில் தனது மகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது 18 வயது மகன் தேவா தந்தையைக் கம்பால் அடித்துள்ளார்.
காயமடைந்து மயங்கி விழுந்த தந்தையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தேவா. ஆனால், சிகிச்சைப் பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தேவாவைக் கைது செய்தனர். பின்னர் சிறையிலடைக்கப்பட்ட தேவா ஜாமீன் வேண்டி உயர்நீதிமன்றாத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
தேவாவின் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், தேவாவை சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீனில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:-
மனுதாரர் தேவா அண்மையில் தான் 18 வயதைக் கடந்துள்ளார். தார்மீக நெறிப்படி தேவா செய்ததில் தவறில்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நபரின் மரணத்திற்கு அவர் காரணமாக இருந்திருக்கிறார். ஆகவே, சட்டப்படி அவர் செய்தது சரியல்ல.
தனது தந்தையைக் கொல்ல வேண்டும் என அவர் விரும்பி இந்தக் குற்றத்தை செய்யவில்லை. குற்றம் செய்த பின்னர் அவர் எங்கும் தப்பியோடவில்லை. அவர் தான் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
நடந்த செயலுக்காக அவர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். வி.ஏ.ஓ. முன்னிலையில் தாமாகவே சென்று சரணடைந்துள்ளார். ஆக, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோட வேண்டும் என்ற அணுகுமுறை அவரிடம் இல்லை. ஆகவே, மனுதாரரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுகிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.