நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை கலெக்டர், போலீஸ் கமிஷ்னரின் டிரான்ஸ்பர் நிறுத்தி வைப்பு
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் இருவரையும் பணியிடமாற்றம் செய்ய தமிழக அரசுக்குப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் பின்னி ஆலை வளாகத்தில் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த ஆலை மூடப்பட்ட பிறகு, குடியிருப்புகளை காலி செய்யுமாறு தொழிலாளர்களிடம் கூறப்பட்டது.

இதை எதிர்த்து இளங்கோவன் என்பவர் உள்பட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தொழிலாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது எனவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.
ஆனால், தொழிலாளர்கள் குடியிருப்பில் 6 வீடுகள் இடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்ய அரசு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் லேண்ட்மார்க் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர், ‘பின்னி ஆலை நிர்வாகத்துக்கும், அதன் தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்னை நிலுவையில் உள்ளது. நிலம் தொடர்பாக பின்னி ஆலை நிர்வாகத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். எங்களுக்கு எதிராக இளங்கோவன் காவல் துறை ஆணையரிடமும், தேசிய எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்திலும் நிறைய புகார் அளித்தார்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என சென்னை காவல்துறை ஆணையர், ஆட்சியர் மீது இளங்கோவன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கில் எங்களை எதிர் மனுதாரராகச் சேர்க்கவில்லை. இது குறித்து எங்கள் தரப்பிடம் விசாரணை செய்யவில்லை.
இந்த நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதிர்காலத்தில் எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஜூலை 2-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications