மொய் வசூலிலும் ஹைடெக்... வந்தாச்சு மொய் டெக்
மொய் பணம் செய்வதில் கூட ஹைடெக் ஆக டிஜிட்டலை புகுத்தி விட்டனர் நம்மவர்கள்.
மதுரை: காதுகுத்து, கல்யாணம், சீமந்தம், மஞ்சள்நீராட்டு விழா, கிடா வெட்டு என எத்தனையோ விஷேசங்கள் நம் ஊரில் கொண்டாடப்படுகின்றன. விஷேசங்களுக்கு செல்பவர்கள் மொய் பணம் கொடுப்பார்கள். சிலர் சீர் செய்வார்கள். இதற்காகவே ஒருவர் நோட்டில் பேர் எழுதி வசூலிப்பார். இப்போது இதிலும் ஹைடெக் புகுந்து விட்டது.
மொய் பணத்தை பானையிலோ, சிலர் அண்டாவிலோ வாங்கி போடுவார்கள். சிலர் சாக்கு மூட்டைகளில் கட்டி எடுத்துப் போவார்கள். இனி அப்படி தேவையில்லை. மொய் பணம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு போய் விடும்.
மோடியின் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு மொய் எழுதுவதை கூட டிஜிட்டலாக மாற்றிவிட்டனர். மொய் டெக் என்ற நிறுவனம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறது.
மதுரை மாவட்டம் செக்காணூரணியில்தான் இந்த மொய் டெக் செயல்படுகிறது. உங்கள் வீட்டில் நடைபெறும் அனைத்து வைபவங்களுக்கும் மொய்ப்பணத்தை ஹைடெக் முறையில் பெற்றுத் தருகிறார்கள். இந்த மின்னணு பணப் பரிமாற்ற முறைக்குப் பெயர்தான் 'மொய் டெக்'.
பொதுவாக தென் மாவட்டங்களில் மொய்ப்பழக்கம் பரவலாக அனைத்து சமூகத்தினரிடமும் உண்டு. திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை வீடு / பெண் வீடு என்று தனித்தனியாக நோட்டுப் போட்டு எழுதிக் கொண்டிருந்த நிலையில், அதனையே மின்னணு வடிவத்தில் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள் மதுரைக்காரர்கள்.
நம் வீட்டிற்கு வந்தது விஷேசத்திற்கு மொய் செய்தவர்களுக்கு திரும்ப செய்யும் போது நாம் நோட்டுக்களை தேடி எடுக்க வேண்டியிருக்கும் இனி அப்படி தேவையில்லை. தற்போது அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறைக்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மொய்ப்பழக்கமும் டிஜிட்டலுக்கு மாறியிருக்கிறது.
மொய் செய்தவர்களுக்கு உடனடியாக ரசீது வழங்குவதுடன், அவர்களது மொபைல் போனில் எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. மொய் செய்யப்பட்ட ஊர் வாரியாக, அகர வரிசைப்படி பைண்ட் செய்து உடனுக்குடன் வழங்கிவிடுகிறார்கள். எல்லாமே ஆன்லைனின் அறிந்து கொள்ளலாம். இணைய தள வசதியும் உள்ளது.
மொய் விபரங்களை எத்தனை ஆண்டுகள் கழித்தும் பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளது. சிடி மற்றும் மெமரி கார்டிலும் பதிவு செய்து தருகிறார்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியவே அழியாது.
திருபுவனத்தில் காதணி விழாவிற்கு மொய் செய்த ரசீது ஒன்றுதான் இப்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. அடடே நம்ம மதுரை மக்கள் ஹைடெக் ஆக யோசித்து அசத்துகிறார்களே!
இந்த மொய் டெக் மொய்யினால் கள்ள நோட்டு பிரச்சினை வராது. பணம் காணாமல் போகாது. ஆனாலும்
என்னதான் சொல்லுங்க மொய் செய்து விட்டு விட்டு அந்த தாம்பூல பை வாங்கிக் கொண்டு வரும் அழகே தனிதான்.