முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு!
இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்க பதிய ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து மக்கள் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கவிஞர் வைரமுத்து தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து சில கருத்துகளை அவர் மேற்கோள் காட்டி இருந்தார். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததால் அவர் வருத்தம் தெரிவித்த போதும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் நின்ற பாடில்லை.
இந்நிலையில் ஜனவரி 18ல் சென்னையில் நடந்த விழாவில் இந்து மத கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று பாரதிராஜா பேசி இருந்தார். ஆண்டாளை மிக மோசமாக விமர்சித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராடும் இந்துக்களை அச்சுறுத்தும் வகையில், நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலை எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா பேசியது குறித்து இந்து மக்கள் கட்சி சென்னை வடபழனி போலீசாரிடம் புகார் அளித்தது. இந்தப் புகாரை போலீசார் ஏற்க மறுத்ததாகக் கூறி அந்தக் கட்சியின் பிரமுகர் வி.ஜி.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று சென்னை வடபழனி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.