நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம் மசூர் பருப்பு... தமிழக அரசு கொள்முதல் செய்ய தடை விதித்த ஹைகோர்ட்!
பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விநியோகிப்பதற்காக கொள்முதல் கோரப்பட்டுள்ள மசூர் பருப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை : அரசின் பொதுவிநியோகத்தில் மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆதிஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2006ல் மத்திய உணவு திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்தினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறை மற்றும் மத்திய உணவு திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அளித்த அறிக்கையிலும் மசூர் பருப்பால் ஏராளமான நோய்கள் வருவதாகக் கூறியுள்ளதை மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். கரூர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை ஏற்று மசூர் பருப்பு கொள்முதல் நிறுத்தப்பட்ட நிலையில் ஜுன் மாத்தில் மீண்டும் மசூர் பருப்பு கொள்முதலுக்காக டெண்டர் கோரப்பட்டள்ளது. இதனால் இவற்றை கொள்முதல் செய்யும் டெண்டருக்குத் தடை கோரியும், அரசின் ஆணையை ரத்து செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இது குறித்து தமிழ்நாடு நகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள், உணவு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை ஜூலை 25க்கு ஒத்திவைத்தனர்.