இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்: தமிழக 'போட்டி' வி.ஹெச்.பி. வலியுறுத்தல்!
ஓசூர்: இந்துக்கள் 5 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஓசூரில் நடைபெற்ற போட்டி விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஓசூரில் "ஹிந்துக்களின் விஸ்வரூப மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவர் ஆர். மெய்யப்பனோ, இந்த மாநாட்டுக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஓசூரில் பிப்ரவரி 7-ந் தேதியன்று நடைபெறும் மாநாடுதான் அதிகாரப்பூர்வமானது; விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பெயரை வேதாந்தம், ஆர்.ஆர்.கோபால், ஆர்.எஸ். நாராயணசாமி ஆகியோர் தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்துக்குள் பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் போட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று ஓசூரில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் அந்த இயக்கப் பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.கோபால் பேசியதாவது:
கடவுள்கள் எல்லாம் நம்முடன் இருந்து வழிநடத்திக்கொண்டிருக்கின்றனர். தெய்வங்கள் கொடுக்கக்கூடிய சக்தியினாலேயே நாம் செய ல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த சக்தி இந்துக்கள் எல்லோருக்கும் உள்ளது. அந்த சக்தியை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பது தான் இப்போதைய கேள்வி.
சமுதாயத்தைப் பற்றி நாம் சிந்திப்பது இல்லை. சமுதாயம் அமைதியான சூழ்நிலையில் இருந்தால் தான் நாம் அமைதியாக வாழ முடியும்.
இந்துக்களுக்கு என்று இருக்கும் ஒரே நாடு இந்த பாரத நாடு. நம்முடைய அடிப்படை பாரதநாடு. நம்முடைய அடையாளம் இந்து. நமக்கு வேறு நாடு கிடையாது.
இந்துக்களிடையே ஒற்றுமையில்லை என்று குறை கூறுகின்றனர். அதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும், இந்துக்கள் ஒற்றுமை வரவேண்டும், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் மோடியை பிரதமராக்கியுள்ளனர்.
நமக்கெல்லாம் ஒரு வீரப்புருஷன் பாதுகாப்பாக இருப்பார், நம் நலனை காப்பார் என்பதற்காகத் தான் மோடிக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நாம் ஜாதி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று சபதம் எடுப்போம். ஜாதி கட்சிகளை தடை செய்யவேண்டும். திராவிட கட்சிகளுக்கு எந்த கொள்கையுமே கிடையாது.
இந்து சமுதாயத்தை பிளவுப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே கொள்கையாக வைத்துள்ளனர்.
விளையாத பூமிகளில் ரியல்எஸ்டேட் செய்வது தவறில்லை. விவசாயம் நடக்கும் பூமிகளை கூறுபோட்டு கற்களைப் போட்டு விவசாயத்தை நிறுத்தி நாட்டில் உணவு பஞ்சத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
விலைவாசியை பார்த்தால் நடுத்தர ஏழை மக்கள் வாழவே முடியாத நிலை உள்ளது. விலைவாசிக்கு காரணம் விளைச்சல் குறைவே. வேலூர் அருகேயுள்ள திருப்பத்தூரில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் நெல்லை உற்பத்தி செய்த விவசாயிக்கு நானே விருது கொடுத்தேன்.
வீடுதோறும் பஞ்சபாண்டவர்கள் போல வீட்டுக்கு 5 குழந்தைகள் தேவையென்று சொன்னோம். இதை நாங்கள் கூறியபோது, எல்லோரும் எங்களை கிண்டல் செய்தனர். நாங்கள் காரணத்தோடு தான் இதைக்கூறுகிறோம்.
நாம் இந்து என்ற அடையாளத்தோடு வாழ வேண்டுமானால் 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும். நம்முடைய ஜனத்தொகை, மற்ற ஜனத்தொகையோடு சமமாக இருக்கும்.
5 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் பொருளாதார வளர்ச்சியோடு பெற்றோரையும் கவனித்துக் கொள்ள முடியும். 5 குழந்தைகளில் 2 குழந்தைகளை தேசத்திற்காக ஒப்படையுங்கள். ஒருகுழந்தையை சமுதாய தொண்டாற்ற ஒப்படையுங்கள். மீதியுள்ள இரு குழந்தைகளை உங்கள் விருப்பம் போல வளர்த்துக் கொள்ளுங்கள்.
பாகிஸ்தான் எல்லையிலிருந்து தீவிரவாதிகளை நமது நாட்டிற்குள் அனுப்பிக் கொண்டேயுள்ளனர். அப்படியொரு ஜிகாத் மறைமுகப்போர் நடந்து கொண்டிருக்கிறது. லவ்ஜிகாத் என்ற ஒரு மறைமுக யுத்தமும் நடந்து கொண்டிருக்கிறது. இந்து பெண்களை காதலித்து மதம்மாற்றி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை கொடுத்துவிட்டு, தலாக் என்று கூறி வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர்.
இவ்வாறு கோபால்ஜி பேசினார்.
இம்மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி, ஆழ்வார் திருநகர் ஜீயர் பரமஹம்ஸ சேத்தியாதி ரெங்கராமானுஜர், திருப்பனந்தாள் காசிமடம் சுந்தரமூர்த்தி தம்பிரான், பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகளார், சேலம் ராஜ ராஜேஸ்வரி மஹிளா சமாஜம் யோகினி சிவாம்பா சரஸ்வதி, வி.ஹெச்.பி. நிறுவனர் எஸ்.வேதாந்தம், மாநில தலைவர் ஆர்.எஸ். நாராயணசுவாமி, இணைப்பொதுச்செயலாளர் ஆத்மானந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.