சொகுசு கார் வாங்குவதாக மோசடி... வங்கியில் ரூ.37 லட்சம் ஏமாற்றிய ஆந்திர ஹோட்டல் அதிபர் கைது
சென்னை: சொகுசு கார் வாங்குவதாகக் கூறி போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ. 37 லட்சம் கடன் வாங்கிய ஆந்திர ஹோட்டல் அதிபரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பேலஸ் ரோடு குப்பத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் (33). ஹோட்டல் அதிபரான கமலேஷ், சென்னை ஆலந்தூரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சொகுசு கார் வாங்குவதாகக் கூறி ரூ. 37 லட்சம் கடன் பெற்றார்.
ஆனால், அந்தத் தொகையை அவர் திருப்பி செலுத்தவில்லை. வாங்கிய காரையும் வங்கிக்குத் தெரியாமல் விற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கமலேஷ் கொடுத்த ஆவணங்கள் போலியானது எனக் கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆலந்தூரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் அஸ்வத் துரைசெல்வம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமலேஷ் மீது புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், புகார் கூறப்பட்ட கமலேஷ் ஓட்டல் தொழில் மட்டும் அல்லாமல் பல்வேறு தொழில்களை செய்து, கமலேஷ் நஷ்டப்பட்டது தெரிய வந்தது.
அதோடு, போலியான வங்கி கணக்கு ஆவணம் மற்றும் வருமானவரி ஆவணங்களை காட்டி, தன்னை பெரிய பணக்காரராக சித்தரித்து கமலேஷ் பென்ஸ் கார் வாங்க கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று கமலேஷைப் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கமலேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.