எடப்பாடிக்கு ஆசை இருக்கு.. துணிச்சல் இல்ல! இந்த கதியில் இருந்தா 10 வருசம் கூட!? SP லட்சுமணன் பொளேர்!
பாஜக - அதிமுக இடையே கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் மோதல் - அதைத்தொடர்ந்த பேச்சுகள் பற்றிப் பேசியுள்ளார் பத்திரிகையாளர் எஸ்பி லக்ஷ்மணன்.
சென்னை : "எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் ஜெயலலிதாவை தேவையில்லாமல் அண்ணாமலை இழுத்துப் பேசுவது ஆகிய சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக தலைவர்கள் பேசுவதை அதிமுக தொண்டன் மன்னிக்க மாட்டான்." என பத்திரிகையாளர் எஸ்பி லக்ஷ்மணன் கூறியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லக்ஷ்மணன், அதிமுக - பாஜக இடையே நிகழ்ந்து வரும் மோதல் போக்கு, அதிமுக தலைவர்களின் பின்வாங்கல் குறித்து நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பாஜகவினர் ஜெயலலிதாவையும், எடப்பாடி பழனிசாமியையும் அவமதித்துள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பாஜக உடனான கூட்டணி உறுதி என்று அறிவித்துள்ளதை தொண்டர்கள் ரசிக்கவில்லை எனக் கூறியுள்ளார் எஸ்பி லக்ஷ்மணன். அவரது பேட்டி வருமாறு:

அதிமுக சாஃப்ட் டோன்
கேள்வி : அதிமுக - பாஜக பிரச்சனையில் இந்த முறையும் அதிமுகவினர் கோபாவேசமாக ஆரம்பித்து மீண்டும் சாஃப்ட் டோனுக்கு போயிருக்கிறார்களே.. ஜெயலலிதாவை விட எனது மனைவியும், தாயும் வலிமையானவர்கள் என அண்ணாமலை பேசிய பிறகும் அதிமுகவினர் பெரிதாக ரியாக்ட் செய்யாததற்குக் காரணம் என்ன?
எஸ்பி லட்சுமணன் : ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என பல பிரிவுகளாகப் பிரிதிருந்தாலும், அந்த பிரிவுகளில் 95% ஆதரவை தன் பக்கம் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ் அதனை நிரூபித்த பிறகும் கூட அவரது உருவப்படத்தைக் கொளுத்தியது, அதிமுகவினர் தங்கள் ஆதர்ச தலைவியாக கருதும் ஜெயலலிதாவை தேவையில்லாமல் இழுத்துப் பேசுவது ஆகிய சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில் அதே வேகத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக தலைவர்கள் பேசுவதை அதிமுக தொண்டன் மன்னிக்க மாட்டான்.

பின்வாங்கிய ஈபிஎஸ் அணி
கூட்டணி தொடரும் என சொல்லவேண்டிய அவசியம் என்ன? துணிச்சல் காட்டுவதைப் போல காட்டிவிட்டு ஏன் பின்வாங்குகிறீர்கள்? உறுதியாக சில முடிவுகளை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணி பெயரை மாற்றினார். ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. அப்படியென்றால் இன்னும் வலிமையற்றவராக, ஆளுமையற்றவராகத் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எங்கள் தலைவி பெயரை தேவையில்லாமல் இழுத்தால் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதோடு நிறுத்தி இருக்கலாமே? எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை, கூட்டணி தொடரும் என்று சொன்னால், ஈபிஎஸ் உருவப்படத்தை யார் வேண்டுமானாலும் கொளுத்தலாமா? ஜெயலலிதாவை யாருடனும் ஒப்பிடலாமா?

ஆசை இருக்கு.. துணிச்சல் இல்லை
கேள்வி : ஒவ்வொரு முறையும் பாஜக - அதிமுக இடையே பிரச்சனை வருகிறது. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கிறார்கள். ஆனால், எப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறாரோ அப்போதே அந்த ஆக்ரோஷம் காணாமல் போய்விடுகிறதே? ஈபிஎஸ்ஸுக்கு இன்னும் பாஜகவை எதிர்க்க நினைக்கவே இல்லையோ?
எஸ்பி லட்சுமணன் : அண்ணாமலை மீது வெளிப்படையாக விமர்சனம் வைத்துவிட்டு வந்தவரை எடப்பாடி பழனிசாமியே முன்னின்று அதிமுகவில் சேர்த்துக்கொண்டது ஒரு மெசேஜை கொடுத்திருக்கும். அண்ணாமலை கோபப்பட்டால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற துணிச்சல் ஈபிஎஸ்ஸின் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும்போது, பாஜகவை எதிர்க்கும் ஆசை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது, ஆனால் அதை செயல்படுத்தும் துணிச்சல் எடப்பாடிக்கு இன்னும் முழுமையாக வரவில்லை என்றே தெரிகிறது. தனது உருவப்படத்தை எரித்ததற்கு எதிர்வினையாக வெளிப்படையாக கட்சியில் இருந்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டு இருக்க வேண்டும்.

அவமானப்படுத்தும் பேச்சு
எங்கேயோ ஏதோ நடக்கிறது என்று பிரக்ஞை இல்லாமல் இருந்தால் இது வலுவான தலைமையாக நீண்டகாலம் தொடர முடியாது. ஈபிஎஸ்ஸுக்காக குரல் கொடுக்கவேண்டிய கடமை இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இருக்கிறது. ஆவேசமாக மைக் முன்னால் போய் பேசுகிறார்களே.. கூட்டணி கட்சியின் தொண்டர்களே ஒரு கட்சியின் தலைவரின் உருவப்படத்தை எரித்தால் உடனே அதற்கு எதிர்வினையாற்றி அறிக்கையாவது விடுத்திருக்க வேண்டும். எடப்பாடிக்குப் பின்னால் அத்தனை லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்கள் அனைவரையும் அவமானப்படுத்துவது போலத்தான் ஜெயக்குமாரின் பேச்சு அமைந்தது.

பாஜகவுக்கு பயம் வந்திருக்கும்
எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை, கூட்டணி தொடர்கிறது என்று சொல்வதன் மூலம் நீங்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டும் அவமானப்படுத்தவில்லை. அவரை நம்பி அவரை பின்தொடரும் லட்சக்கணக்கான தொண்டர்களை அவமானப்படுத்துவதாகத்தான் அர்த்தம். கூட்டணியைப் பற்றி தேர்தல் வரும்போது பார்ப்போம் என ஜெயக்குமார் சொல்லி இருந்தாலே பாஜகவுக்கு ஒரு பயம் வந்திருக்கும். அதிமுக தன்னை தூரப்படுத்துகிறது என்ற எண்ணம் வந்தால், பாஜகவில் இதற்கு காரணமானவர்கள் அழைத்து கண்டித்திருப்பார்களே.. இதைச் செய்யக்கூட பயமாக இருக்கும்போது ஏன் தலைமையில் தொடர்கிறீர்கள் என்ற கேள்விதான் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருக்கும். அதனை அதிமுகவின் எந்தத் தொண்டனாலும் ஜீரணிக்க முடியவில்லை.

இந்த கதியில் இருந்தால்
கேள்வி : ஜெயலலிதா இருந்த இடம் கோவில் மாதிரி, அங்கு வன்முறை செய்தார்கள் என்று ஓபிஎஸ் தரப்பை ஈபிஎஸ் அணியினர் விமர்சித்தனர். இன்று ஜெயலலிதாவுக்கு மரியாதைக்குறைவு ஏற்படும்படி பேசிய பாஜக தலைவரை கண்டிக்க மாட்டோம் என்று இருந்தால் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்பார்களா?
எஸ்பி லட்சுமணன் : ஈபிஎஸ் மீது நம்பிக்கை இழந்து ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடுவார்கள் என்ற நிலை இருக்காது, அணிகளை பற்றியே பேசவேண்டாம். எந்த அணியில் இருந்தாலும் அவர்கள் ஜெயலலிதாவை தலைவியாக ஏற்றுக்கொண்டவர்கள் தான். அவர்களுக்காக அதிமுகவில் இருந்து ஒரு அறிக்கை கூட இந்த நிமிடம் வரை வரவில்லை என்பதுதான் வேதனைப்பட வேண்டிய உண்மை. எனக்குப் பிறகும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் இருக்கும் என்றால், இந்த கதியில் இருந்தால் எப்படி 100 ஆண்டுகள் இருக்கும்? 10 ஆண்டுகள் கூட தொண்டர்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தங்கள் தலைவரைச் சீண்டினால் அதற்கு உரிய பதிலடியைக் கொடுக்கவேண்டும். அதற்கே தயங்கினால் என்ன ஆளுமை? என்ன தலைமைப் பண்பு?












Click it and Unblock the Notifications