புதுவை ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி- சரணாகதி வியூகத்தால் வென்ற ரங்கசாமி!!
புதுச்சேரி: ராஜ்யசபா தேர்தலில் எவருமே நினைத்துக் கூட பார்க்க முடியாத 'சரணாகதி' வியூகத்தை வகுத்தி தி கிரேட் எஸ்கேப்பாகி இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸின் கண்ணனின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் முடிவடைவந்ததால் அந்த இடத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.
30 எம்.எல்.ஏக்களை கொண்ட புதுவை சட்டசபையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் எந்த ஒரு வேட்பாளரும் எம்.பி.யாக வெல்ல முடியும். இதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவை ராஜ்யசபா எம்.பி.யாக்க ரங்கசாமி திட்டமிட்டார். ஆனால் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பா.ஜ.க.வுக்கு போகுமோ?
பின்னர் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷா, ரங்கசாமியை சந்தித்து பேச, ஆஹா பா.ஜ.க.வுக்கு தாரை வார்க்கப்படுகிறது எம்.பி.சீட் என்ற செய்தி கிளம்பியுள்ளது.. இதற்கும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏகத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோகுலகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு
இதையடுத்து தனது நெருங்கிய நண்பரான தொழிலதிபர் கோகுலகிருஷ்ணனையாவது எம்.பி.யாக்கிவிடலாம் என முயற்சித்தார் ரங்கசாமி. ஆனால் இதற்கும் என்.ஆர். காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பிய கையோடு கலகக் குரல்களும் வெடித்தன.
களத்தில் ஜெகத்ரட்சகன்
இதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த காங்கிரஸ், தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனை சுயேட்சையாக நிறுத்த வைத்து ஜெயிக்க வைப்பது என வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டனர். இதில் தி.மு.க. மேலிடமும் கிரீன் சிக்னல் காண்பிக்க ஜெகத்ரட்சகனும் தம் பங்குக்கு ஆடுகளத்து வர தயாராகிவிட்டார். அவருக்கும் ஆதரவளிக்க என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் 'தயார்'படுத்தப்பட்டனர். மேலும் ஒரு சில அமைச்சர்களும் கூட ஜெகத் பக்கம் தாவுவதற்கும் உறுதியளித்திருந்தனர்.
அரசியலில் சகஜமப்பா
இதனால் புதுச்சேரியில் அடுத்து என்ன நடக்கும்? அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் அணி மாறினால் ஆட்சியே கவிழுமோ? என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டரின் நகைச்சுவையை மெய்ப்படுத்தும் விதத்தில் ரங்கசாமி காய்நகர்த்தலில் ஈடுபட்டார்.
அதிமுகவிடம் சரண்
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது என்.ஆர். காங்கிரஸ். ஆனால் தேர்தல் முடிந்த கையோடு உறவும் முறிந்தது. இதனால் 'எதிரி' கட்சி ரேஞ்சுக்கு அ.தி.மு.க.வினர் என்.ஆர். காங்கிரசை பார்த்து வந்தனர். ஆனாலும் ஆட்சியைத் தக்க வைத்தாக வேண்டும் என்பதற்காக அ.தி.மு.கவிடமே சரணாகதி அடைவது என முடிவெடுத்த ரங்கசாமி, தமிழக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு அ.தி.மு.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் தருவதாக உறுதியளித்தார்.
வென்றது அதிமுக- ரங்கசாமி டீம்
ஆனால் போயஸ் தோட்டத்து மேலிடமோ இதை உடனே நிராகரித்துவிட்டதாம். ஆனால் இந்த முடிவு தி.மு.க.வின் ஜெகத்ரட்சகனுக்குத்தான் சாதகமாகிவிடும் என சுட்டிக்காட்ட மேலிடமும் ஓகே சொல்லிவிட்டது. இதன் பின்னரே வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான கடந்த 18-ந் தேதி திடீரென அ.தி.மு.க.வின் அன்பழகன் வேட்பு மனுவை வாங்கிச் சென்றார். பின்னர் ரங்கசாமியும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களும் சந்தித்து ஆலோசனை நடத்த புதுவையே பரபரக்க ஆரம்பித்தது.
தன்னுடைய நண்பரான தொழிலதிபர் கோகுலகிருஷ்ணனை அ.தி.மு.க.விலும் இணையவைத்தார் ரங்கசாமி. உடனே கோகுலகிருஷ்ணனே வேட்பாளர் என அறிவிக்கப்பட அவருடம் உடனேயே வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டார். தற்போது கோகுலகிருஷ்ணன் ஏக மனதாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுவிட அதிருப்தி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரங்கசாமியின் ஆச்சரிய வியூகத்தால் வாயடைத்துப் போயுள்ளனராம்.