கங்கை அமரனிடமிருந்து பைய்யனூர் நிலத்தை அபகரித்த சுதாகரன்..!
சென்னை: இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் சுதாகரன் எப்படி அதிரடியாக நிலங்களை அபகரித்தார் என்பதை நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பிலும், கங்கை அமரன் கொடுத்த வாக்குமூலத்திலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பெங்களூர் தனி நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3000 ஏக்கர் நிலங்களை எப்படி ஜெயலலிதா குழுவினர் வாங்கினர் என்பது விளக்கப்பட்டுள்ளது.
அந்த விவரம்....
கார்டனுக்கு அழைக்கப்பட்ட உயர் அதிகாரிகள்
நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பில்.... சென்னை வடக்கு கடற்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தின் அதிகாரியான ராதாகிருஷ்ணனை அவரது துறை சார்ந்த உயரதிகாரிகள் போயஸ் கார்டனுக்கு செல்லுமாறு உத்தரவிடுகிறார்கள். ஜெயலலிதாவின் உத்தரவால் அழைக்கப்பட்ட அவர் அன்றைய தினம் ஆறு சொத்து பத்திரங்களை பதிவு செய்கிறார். அதில் ஒன்றில் கூட வாங்குபவர் பெயர் கிடையாது.
ஜெ.வின் விருப்பத்தை நிறைவேற்ற
உயர் பதவியில் இருக்கும் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்ற இந்த சட்டவிரோத காரியங்களை செய்திருக்கிறார்.
கங்கை அமரனின் 22 ஏக்கர் நிலம்
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலம் பையனூரில் இருந்தது. அதை ஜெயலலிதாவும் சசிகலாவும் வாங்க விரும்புகிறார்கள் என ஜெயலலிதாவின் உறவினர் பாஸ்கரன் அவரை போயஸ் கார்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
நிலத்தை் தர மறுத்த கங்கை அமரன்
அங்கு கங்கை அமரனிடம் சசிகலா, ஜெயலலிதா ஆகியோர் அந்த இடத்தை வாங்க விரும்புவதாக கூறினர். அதற்கு "நான் கதை எழுதுவதற்கும் இசை அமைப்பதற்கும் அந்த பையனூர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள சிறிய வீடு உதவியாக உள்ளது. அதை விற்க எனது குடும்ப உறுப்பினர்கள் விருப்பப்படவில்லை என விற்க மறுத்துள்ளார்.
அதிரடியாக வந்த சுதாகரன்
அதன்பிறகு சுதாகரன் பத்திரப்பதிவு அதிகாரிகளை கங்கை அமரனது வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளார். 22 ஏக்கர் நிலத்தை வெறும் 13 லட்ச ரூபாய்க்கான டி.டி.யை கங்கை அமரனது கையில் கொடுத்து விட்டு, அந்த நிலத்தை வாங்குபவர் யார் என குறிப்பிடாத சொத்து பதிவு பத்திரங்களில் கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்றார்கள் என கோர்ட்டில் ஆவணங்களுடன் சாட்சியளித்துள்ளார்.
வாங்கியது மட்டுமல், வேகமும் சந்தேகம் தருகிறது
இவர்கள் நிலங்களை வாங்கிப் போட்ட விதம் மட்டும் சட்டவிரோதமாக இருக்கவில்லை. அந்த நிலங்களை வாங்கிய வேகமும் சந்தேகத்தை உருவாக்குகிறது.
1163 ஏக்கர் நிலம்
சுதாகரனுக்கு சொந்தமான ரிவர்வியூ வே அக்ரோ பார்ம்ஸுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளிக்குளம், வீரான்குளம், சேரக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 1163 ஏக்கர் நிலத்தை 15ம் தேதி சுதாகரன் வந்து பார்த்தார். அந்த நிலத்தை விற்க எங்களுக்கு சம்மதம் என ஒப்புதல் பத்திரங்களை வாங்கி 20ம் தேதி 23 லட்ச ரூபாய்க்கு சென்னை வடக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
ஏக்கர் கணக்கில் நில வளைப்பு
இப்படி ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்குவதற்கென்றே பத்திரப்பதிவு எழுத்தர்களை போயஸ் கார்டனில் பத்திரப் பதிவு துறையிலிருந்து தினமும் வரவழைத்தனர்.
மார்க்கெட் மதிப்புக்குக் குறைவாக
பல சொத்துக்களை மார்க்கெட் விலைக்கு மிகவும் குறைவான மதிப்புகளில்தான் வாங்கினார்கள். நிலத்தை ஜெயலலிதாவுக்கும் சசிகலா வகையறாக்களுக்கும் விற்ற நில உரிமையாளர்களுக்கு கடைசி வரை யார் தங்களது நிலத்தை வாங்குகிறார் என தெரியாது. இப்படி ஆட்சி அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி ஊழலில் சம்பாதித்த பணத்தை வைத்து நிலத்தை வாங்கி குவித்தது சட்டப்படி குற்றம்.
வங்கிகள் மூலமாக பாய்ந்த பணம்
இந்த முறைகேடுகளை செய்தவர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா செயல்பட்டாலும், இந்த 66 கோடி ரூபாய் பணமும் வங்கிகள் வழியாகத்தான் புழங்கியுள்ளன.
பல போலி நிறுவனங்கள் பெயரில்
வங்கிகளில் இந்தப் பணத்தை பல்வேறு கம்பெனிகளின் பெயரில் கொண்டு போய் போட்டவர்கள் இருவர். ஒருவர் ராம்விஜயன். மற்றொருவர் ஜெயராமன். போயஸ் கார்டனில் இவர்கள் வேலைபார்த்த வேலைக்காரர்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
ஜெயராமன் கொடுத்த சாட்சியம்
இதில் ராம்விஜயன் இறந்துவிட்டார். ஜெயராமன் இந்த வழக்கில் சாட்சியமளித்துள்ளார்.
சூட்கேஸ் சூட்கேஸாக பணம் கொடுத்த சசிகலா
தினமும் சசிகலா சூட்கேசிலும் பையிலும் லட்சக்கணக்கான ரூபாயை என்னிடம் தருவார். அத்துடன் அந்த பணத்தை எந்த கம்பெனி அல்லது தனி நபர் கணக்கில் போட வேண்டும் என வங்கி கணக்கு செலுத்தும் படிவத்தில் எழுதி தருவார். அதில் என் கையெழுத்தைப் போட்டு வங்கியில் செலுத்துவேன் என ஜெயராமன் சாட்சியமளித்தார்.
எல்லாமே ஜெ. பணம்
விஜயனும் ஜெயராமனும் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்திய படிவங்களை நாங்கள் பார்த்தோம் என வங்கி மேனேஜர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் வீட்டு வேலைக்காரர்கள். ஜெயலலிதாவின் ஊழல் பணத்தை, சசிகலா இவர்கள் மூலம் வங்கியில் பணம் போட்டிருக்கிறார். விஜயன், ஜெயராமன் இருவரும் வங்கியில் செலுத்திய பணம் ஜெயலலிதாவின் பணம்தான் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பில் கூறியுள்ளார்.