சு.சாமியை எப்படி யூஸ் பண்ணப் போகுதாம் பாஜக... டைம்ஸ் நவ்வைத் தவிர வேற எங்கயுமே காணோமே...??
சென்னை: மதிமுகவையும், வைகோவையும் தாறுமாறாக ஏசிப் பேசியே பழகிப் போய் விட்ட சுப்பிரமணியசாமியின் வாயை சற்றே கட்டிப் போட்டு வைத்திருக்கிறது பாஜக. அதேசமயம், அவரை தமிழக லோக்சபா தேர்தல் களத்தில் எப்படி பயன்படுத்தப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
அவரை பிரசாரத்தில் இறக்கி விட்டுப் பேச விடுமா.. அப்படியே பேச விட்டாலும் நிபந்தனை விதித்து பேச விடுமா.. அல்லது உன் இஷ்டத்துக்குப் பேசப்பா என்று சுதந்திரமாக விடுமா என்பதும் தெரியவில்லை.
ஈழத் தமிழர்களுக்கும், தனி ஈழத்துக்கும் முற்றிலும் விரோதமானவர் சாமி. மேலும் பிரபாகரனை கடுமையாக விமர்சித்தவரும் கூட. ஆனால் வைகோவும், மதிமுகவும் எப்படி என்பது உலகத்துக்கேத் தெரிந்த கதை. எனவே சாமியை எந்த வகையில் பாஜக பயன்படுத்தப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
கூட்டணிக்கு வேட்டு வைக்கப் பார்த்தவர்
பாஜக அமைத்துள்ள முதல் கூட்டணிக்கு முதலிலேயே குண்டு வைத்துத் தகர்க்கப் பார்த்தவர் சாமி. மதிமுகவுடன் கூட்டணியா கூடவே கூடாது என்று குய்யோ முறையோ வென்று குதித்தவர் சாமி.
அட போப்பா அந்தாண்டை...
இதனால் டென்ஷனாகிப் போனது தமிழக பாஜக தலைமை.. எல்லாம் கூடி வரும் நேரத்தில் இவர் என்னய்யா இப்படி பேசுறாரே என்று கோபப்பட்ட தமிழக தலைவர்கள், மேலிடத்தில் போய் முறையிட சாமியைக் கூப்பிட்டு கூட்டணி முடிவாகும் வரை அந்தப் பக்கமே போகக் கூடாது என்று கூறி விட்டதாக கூறப்பட்டது.
சாமியைக் காணோம்
இதனால் சென்னை பக்கமே சாமியைக் காணவில்லை. ஏதாவது ஒரு டிவியில்தான் அவர் அடிக்கடி பிரசன்னமா்கி.. யூ சி.. ஐ சி.. வி சீ என்று ஏதாவது விவாதத்தில் அர்னாப்புடனும், மற்றவர்களுடனம் கதைத்துக் கொண்டிருக்கிறார்.
கூட்டணி முடிவான பின்னரும் எஸ்...
ஆனால் தற்போது கூட்டணி முடிவான பின்னரும் கூட சாமியைக் காணவில்லை. எங்குமே அவரது பேட்டியைக் காண முடியவில்லை. கூட்டணி குறித்தும் அவர் கருத்து ஏதும் தெரிவித்ததாகத் தெரியவில்லை.
பிரசாரத்திற்கு வருவாரா
தமிழக லோக்சபா தேர்தலில் அவர் பிரசாரமாவது செய்வாரா என்பதும் தெரியவில்லை. அவரை பிரசாரத்திற்கு அழைப்பார்களா என்பதும் தெரியவில்லை.
ஒரு வேளை விஜயகாந்த்துடன் இணைந்து..
இதுதான் இருப்பதிலேயே பெரிய காமெடியாக இருக்கும். விஜயகாந்த்துன் சேர்ந்து இவரை பிரசாரம் செய்ய விட்டால் இவர் பேசுவது விஜயகாந்த்துக்குப் புரியாது. விஜயகாந்த் பேசுவது இவருக்குச் சுத்தமாகப் புரியாது.. ரொம்பவே தமாஷாக
இருக்கும்.
டைம்ஸ் நவ் பக்கம் பார்க்கலாம்
ஒரு வேளை சாமியைப் பார்த்தே ஆக வேண்டும் என்று யாராவது ஆசைப்பட்டால் அவர்கள் பேசாமல் டைம்ஸ் நவ் டிவியைப் போட்டுப் பார்க்கலாம். ஏதாவது ஒரு நேரத்தில் இவரது முகத்தைக் காணும் பாக்கியம் கிடைக்கலாம். காரணம், அந்த டிவி தான் அவரையும் மதித்து கருத்து கேட்டுக் கொண்டிருக்கிறது.
பல கட்சி கண்ட பலசாலி
ஒரு காலத்தில் ஜனதாக் கட்சியை விடாப்பிடியாக நடத்தி வந்தார். பின்னர் ஜெயலலிதாவை விரட்டி விரட்டி டார்ச்சர் கொடுத்தார். கேஸ் மேல் கேஸ் போட்டார். திடீரென முல்லைப் பெரியாறு வழக்கையும் போட்டு மக்களுக்கு நல்லதையும் செய்தார். திடீரென மதுரை தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்று அதிரடி வைத்தியமும் கொடுத்தார். திடீரென காணாமல் போனார். அப்புறம் பாஜகவில் போய்ச் சேர்ந்து விட்டார்.
கடவுளைக் கூட கணித்து விட முடியும்.. ஆனால் இந்த சாமியை முடியவே முடியாது....