நெடுவாசலைப் பயன்படுத்தி தனது இமேஜேக் காப்பாற்ற ஐடியா பண்ணும் கருணாஸ்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க தனது சட்டசபை உறுப்பினர் பதவியையும் இழக்க தயாராக உள்ளதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க எம்எல்ஏ பதவியையும் இழக்க தயாராக உள்ளேன் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழகம் இந்தியாவில் தான் உள்ளதா என்பது கேள்விகுறியாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்புப தெரிவித்து 22வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகரும் சசிகலா ஆதரவு எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "போராட்டம் நடத்தும் உங்களுக்கு நன்றி. உங்கள் உணர்வே என் உணர்வும். சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கானது. அந்த சட்டமும் திட்டமும் மக்களுக்கு விரோதமாக இருந்தால் மாற்றிட வேண்டும்.
அதற்காக தான் சட்டசகை, நாடாளுமன்றம் உள்ளது. இந்தியாவி்ல் தண்ணீருக்கான யுத்தம் வரப்போகுது. உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் தண்ணீர் கொடுக்க மறுக்கும் மாநிலங்களும் உள்ளது.
அதனால தான் சொல்றோம்.. இந்த அழிவு திட்டம் வேண்டாம். மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பை மத்திய அரசு கொடுக்கவில்லை. தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இந்த திட்டத்தை தடுக்க என் எம்எல்ஏ பதவியை இழக்கவும் தயாராக உள்ளேன்" இவ்வாறு நடிகர் கருணாஸ் பேசினார். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் ஐக்கியமானதால் நடிகர் கருணாஸ்க்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதனை சரிகட்ட நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நல்லப் பெயர் எடுக்கப்பார்க்கிறார் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சொந்த தொகுதியான திருவாடனையில் பொதுமக்கள் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர் என்பது நினைவுக்கூறத்தக்கது.