பிறந்த நாளுக்கு பரிசுப் பொருட்கள் வேண்டாம்: வெள்ள பணிகளுக்கு பங்களிக்குமாறு கனிமொழி வேண்டுகோள்
சென்னை: தனது பிறந்த நாளுக்கு பரிசுப் பொருட்கள் அளிக்க வேண்டாம். அதற்கு பதிலாக வெள்ள நிவாரண பணிகளுக்கு நேரடியாக பங்களிக்குமாறு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது முகநூலில் பதிவு செய்துள்ளது:
சமீபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பிற கடலோர மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாயின. மக்களின் வாழ்வு எளிதில் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், சிறு கடைகள், நிறுவனங்கள், மருத்துவமனைகள் என்று பாதிக்கப்பட்ட பட்டியல் முடிவின்றி நீள்கிறது. தற்போது மழை நின்றுவிட்டாலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் நிறைவடைய பல மாதங்கள் ஆகும்.
இந்த ஆண்டு எனது பிறந்த நாளை முன்னிட்டு, பரிசுப் பொருட்களையோ, பூங்கொத்துகளையோ அல்லது சால்வைகளையோ ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கு பதிலாக தற்போது நடைபெற்று வரும் வெள்ள நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேரடியாக பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
எனது நலன் விரும்பிகள் விளம்பர தட்டிகள், பதாகைகள் அமைப்பதை விட்டு வெள்ள நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கடந்த சில வாரங்கள் நம்மிடையே ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் தூண்டுவதாக இருக்கட்டும். இப்பேரழிவால் ஏற்பட்ட துயரங்களை களைவதில் நமது முயற்சிகளைத் தொடர்வோம் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.