எனக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசான் கருணாநிதி... நடிகர் கமல்ஹாசன் புகழாரம்
கருணாநிதியின் வசனங்கள்தான் ஒருவர் திரைத்துறை, நாடகத் துறைக்கு செல்வதற்கான கேட் பாஸ், அதாவது நுழைவுச் சீட்டு ஆகும் என்று நடிகர் கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: தமக்கு தமிழ் கற்றுத்தந்த ஆசான்களில் ஒருவர் கருணாநிதி என அவரது 94-வது பிறந்தாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாளையோட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் வீடியோ பதிவில் தெரிவித்துள்ள வாழ்த்தில் அவர் கூறுகையில் கருணாநிதியின் வசனம் என்பது நாடக, சினிமா துறைக்கு வரும் கலைஞர்களுக்கு அனுமதிச் சீட்டாகும்.
நீச்சல் தெரியுமா என்றால் நீரில் குதிச்சு காட்டுவது போல், நடிக்கத் தெரியுமா என்றால் கருணாநிதி வசனத்தை சிவாஜி போல் பேசினால் போதும் அந்த கலைஞன் நடிக்கத் தெரிந்தவர் என்று அங்கீகரிக்கப்படுவார். சட்டம் என் கையில் படத்தின் 100-ஆவது நாள் விழாவின்போது கருணாநிதியுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
முத்தமிழ் அறிஞர்கள்
மேடையில் ஒரு முறை பேசும்போது கருணாநிதி, சிவாஜி கணேசன், கண்ணதாசன் ஆகிய மூன்று பேரை குறிப்பிட்டு தமக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்கள் என்றேன். அப்போது மறுநாள் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர். 3 பேரை சொன்னதற்கு பாராட்டு தெரிவித்தார்.
நானில்லையா...
அப்போது விளையாட்டாக கேட்டார் நான் ஆசான் இல்லையா என்று, அதற்கு வாத்தியாரே நீங்கதான் என்றேன். கருணாநிதியின் வசனத்தை சிவாஜிகணேசன் குரலில் நடித்து காட்டுவது என்பது ஒரு பரீட்சை. திரைக்கதாசிரியர், வசன கர்த்தா ஆகியவற்றில் கருணாநிதியின் பெயர் சரித்திரத்தில் பொரிக்கப்பட வேண்டிய பெயர்.
அற்புதமான கதாசிரியர்
கருணாநிதி மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல அற்புதமான கதாசிரியர். கருணாநிதியுடனான உறவு அரசியலுக்கு அப்பாற்றட்ட ஒன்று. தசாவதாரம் படத்தை பாராட்டி என் கன்னத்தை கிள்ளியவர் கருணாநிதி. எனது படங்களை நான் அவருக்கு பிரிவீயூ ஷோ போட்டு காட்ட மறந்து விட்டாலும் அவர் நினைவுப்படுத்துவார்.
மனம் இருந்தால் போதும்
வாழ்த்த வயதில்லை என்று சிலர் கூறுவர். ஆனால் வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. மனம் இருந்தால் போதும். கருணாநிதியின் வசனத்தை பேசுபவன், நடிப்பதற்கான தகுதியைப் பெற்றவன் நான். அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவர் எவ்வளவு இளமையில் வந்திருக்க வேண்டும். அதற்காக அவர் எத்தனை முதுமைகளை சந்தித்திருப்பார்? என்றார் கமல்ஹாசன்.