மதுரை மாநகராட்சி தீர்மானம் தனக்கு கிடைத்த வெற்றி: மு.க.ஸ்டாலின்
திருநெல்வேலி: மதுரை மாநகராட்சியில் இயற்றப்பட்ட தீர்மானம், தமது பயணத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டு என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் "நமக்கு நாமே" பயணத்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். அதனாலேயே, அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என அதிமுக உறுப்பினர்கள் சார்பில் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ராஜன் செல்லப்பா குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரியைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ளார். 3வது நாள் சுற்று பயணமாக இன்று காலை நெல்லை மாவட்டம் பணகுடிக்கு வந்தார். அப்போது அவருக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள செங்கல் சூளை தொழிலாளர்களை சந்தித்தார். முன்னதாக அவர் செங்கல் சூளையில் செங்கல் தயாரிப்பது எப்படி? என்பதை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது செங்கல்சூளை நிர்வாகி ஒருவர் மு.க. ஸ்டாலினிடம், தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வால் செங்கல் உற்பத்தி தொழில் நலிவடைந்து விட்டது என்று கூறினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் தொடங்கினேன். இன்று 3வது நாளாக நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளேன். இங்கு செங்கல் சூளையில் எப்படி வேலை பார்க்கிறீர்கள்? உங்களின் சூழ்நிலை என்ன? என்பதை தெரிந்து கொண்டேன். இந்த தொழில் நலிவடையாமல் இருக்க அ.தி.மு.க. அரசு முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொழிலாளர்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று நாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதை விட மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். நேற்று குமரி மாவட்டத்தில் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேசினேன். அவர்கள் உங்கள் ஆட்சி எப்போது வரும்? என ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்று என்னிடம் கூறினார்கள்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி காணொலி ஆட்சி. முதல்வர் ஜெயலலிதா சட்டசபை, கோட்டைக்கு முறையாக வருவதில்லை. ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
பின்னர், ஏர்வாடிக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு, நியாய விலை கடைக்குச் சென்று, பொதுமக்கள் எதிர்கொள்ளும் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து, களக்காட்டிற்குச் சென்ற ஸ்டாலின், அங்கும் பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களைப் பெற்றார்.
அப்போது, செய்தியாளரிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் இயற்றப்பட்ட தீர்மானம், தமது பயணத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டு எனக் கூறினார்.