நீங்க என்னோட பேஸ்புக்கை பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.. ஜெ.வுக்கு ஸ்டாலின் "நச்" பதிலடி!
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலை மறுத்திருந்தாலும், முதல்வர் ஜெயலலிதா என்னுடைய முகநூல் பக்கத்தைத் தொடர்ந்து பார்த்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2015-2016-ஆம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான நேற்றைய விவதாத்திற்கு பின் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரையில், திமுக சட்டமன்றக் குழு தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை பதிவு செய்துள்ளதாகவும், அவை உண்மையிலேயே அவரது கருத்துக்கள் தானா என்பதை விளக்கிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு தனது பேஸ்புக் பக்கம் மூலமாகவே பதிலளித்துள்ளார் ஸ்டாலின். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தேசிய குற்ற ஆவணக்காப்பகத் தகவல்...
தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளி விவரங்களை மறுத்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த புள்ளி விவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை. ஆகவே அந்த புள்ளி விவரங்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக்காப்பகத்திடம் அவர் கேட்டுத் தெரிந்து கொள்வது தான் பொருத்தமாக இருக்கும்.
மகிழ்ச்சி...
எனினும் என்னுடைய முகநூல் பக்கத்தை முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து வருவதற்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் அவரது கணினி மூலம் அவர் மாநிலம் முழுவதும் மெய் நிகர் சுற்று பயணம் செய்து மக்களின் உணர்வுகளை, அவர்களது ஏமாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு நாமே..
மாநிலம் முழுவதும் செல்லும் "நமக்குநாமே" பயணத்தின் வீடியோக்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன். ஆகவே என் முகநூல் செய்திகளை முதல்- அமைச்சர் தொடர்ந்து படித்தால் மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள், கனவுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
எனது முகநூல் பக்கம் உதவும்...
முதலமைச்சரால் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ள பொறுப்புணர்வோடு கூடிய அக்கறையில்லை என்றாலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள எனது முகநூல் பக்கம் அவருக்கு பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.