ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்ற தமிழக அரசுக்கு ஆதரவு: டி. ராஜேந்தர்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாட்டை வரவேற்பதாக லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சி: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாட்டை வரவேற்பதாக லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் கூறியதாவது:
தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்காது என்ற முடிவை ஆதரிக்கிறேன். தமிழக அரசு இப்படி தெரிவித்தும் மத்திய அரசு கெடுபிடியாக உள்ளது.
இதற்காக நிலத்திற்கு பேசினார்கள் விலை, அதற்காக வீசினார்கள் வலை, அதனால் இந்த நிலை, எனவே போட்டு விட்டார்கள் துளை, இதனால் தான் செய்து கொள்கிறார்கள் தற்கொலை.
வடமாநில மீன்வர்களுக்கு பாதிப்பு என்றால், இந்திய மீனவர்கள் என்று வடநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டால் தமிழ் மீனவர்கள் என குறிப்பிடுகிறார்கள். இதனை மத்திய அரசு தட்டிக்கேட்க வேண்டும்.
நடிகைகள் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பெண்களுக்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். பெண்கள் ரோட்டில் செல்பி எடுங்கள், ஆனால் பெட்ரூமில் செல்பி எடுக்க வேண்டாம். செல்பி கலாச்சாரத்தை அளவோடு நிறுத்துங்கள்.
இவ்வாறு டி. ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்தார்.