ஈரோட்டில் தோற்றதால் திருப்பூர் தொகுதிக்கு மாறும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!
பவானி: திருப்பூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பவானியில் அக்கட்சியின் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய இளங்கோவன், லோக்சபா தேர்தலில் தனியே போட்டியிட்டால் திருப்பூரில் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் சோனியாவிடம் தெரிவித்து விட்டேன். காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது கட்சியினர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டர்களை பார்த்த பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றும் தொண்டர்கள் இருக்கையில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தனியே விடப்பட்டது, முடிந்து விட்டது என்று கூறுபவர்களுக்கு நமது சக்தியை வெளிப்படுத்த வேண்டும். வெற்றிக் கூட்டணி எனக் கூறிக் கொண்டு பிரசாரம் செய்யும் கட்சிகளுக்கிடையே நடக்கும் தொகுதிப் பங்கீட்டுச் சண்டையை நாடே பார்த்து சிரிக்கிறது என்றார்.
கடந்த தேர்தலில் ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் இளங்கோவன். இதனால் இம்முறை திருப்பூருக்கு இடம் மாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.