நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன், யாரும் தடுக்க முடியாது.. தீபா அதிரடி அறிவிப்பு
நான் திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவேன், என்னை யாராலும் தடுக்க முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை : முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். இதனையடுத்து முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பெண் தொண்டர்களுக்கு சசிகலாவை பிடிக்கவில்லை. ஏராளமானோர் சசிகலா ஏன் போயஸ்கார்டன் வீட்டில் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பொதுச்செயலாளரான சசிகலா முதல்வராகவும் முயற்சி செய்து வருகிறார். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இன்று தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீடு முன்பு குவிந்தனர்.
அப்போது பல பெண் தொண்டர்கள் சசிகலா ஒழிக என்று முழக்கமிட்டனர். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று முழக்கமிட்டனர். காலையில் இருந்தே காத்திருந்த தொண்டர்களிடம் பால்கனியில் இருந்து வணக்கம் கூறினார். இரட்டை விரலை காட்டினார் தீபா.
பால்கனியில் நின்று தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா, என் அரசியல் பயணத்தை யாரும் தடுக்க முடியாது என்றார். திட்டமிட்டபடி அரசியலுக்கு வருவேன் தொண்டர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் தீபா கூறினார். தொண்டர்கள் மீண்டும் காத்திருக்கவே, மைக் மூலம் பேசினார் தீபா. அப்போது அவர் ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவர் செய்த தியாகங்களுக்கு ஈடு இணையே இல்லை. உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என்றும் தீபா கூறினார்.
ஜெயலலிதா மரணமடைந்து இன்றோடு 30 தினங்கள் முடிவடைந்த நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசி தனது நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார் தீபா. தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவு பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.












Click it and Unblock the Notifications