மெடிக்கல் காலேஜுக்காக என் உயிரையும் கொடுப்பேன் - செந்தில் பாலாஜி சபதம்!
கரூர் வாங்கல் குச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைவதற்காக என் உயிரையும் கொடுப்பேன் என அதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர்: கரூர், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க என் உயிரைக் கொடுத்தவது போராடுவேன் என அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், 110 விதியின் கீழ், கரூரில் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். அதற்காக ரூ. 229 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. வாங்கல் குச்சிபாளையத்தில் 25 ஏக்கர் நிலமும் அதற்காக ஒதுக்கப்பட்டது. மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனால், நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கரூர் நகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்ட அரசாணை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸில் புகார்
ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய வாங்கல் குச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவில்லை. அதற்கு லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும்தான் காரணம். இவர்கள் இந்த திட்டத்தை செயல்பட விடாமல் தடுக்கின்றனர் என கூறி கரூர் காவல்நிலையத்தில் சொந்த கட்சி எம்பி மற்றும் அமைச்சர் மீது செந்தில் பாலாஜி புகார் கொடுத்தார்.
உண்ணாவிரதம்
தம்பிதுரையும் விஜயபாஸ்கரும் தடுக்கும் இந்த திட்டத்தை முதலில் அறிவித்தபடியே வாங்கல் குச்சிபாளையத்தில் அமைக்க 28ஆம் தேதி தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக செந்தில் பாலாஜி அறிவித்தார்.
உயிரையும் கொடுப்பேன்
திட்டமிட்டபடி வாங்கல் குச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைக் கட்ட வேண்டும். அதற்கான வேலைகளை 27ஆம் தேதி தொடங்க வேண்டும். இல்லையென்றால் காவல்துறை அனுமதி கொடுக்காவிட்டாலும், 28ஆம் தேதி மக்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன். என் உயிரைவிட்டாவது வாங்கல் குச்சிபாளையத்தில் மருத்துவமனையை அமைப்பேன் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
நீதிமன்றம் தடை
வாங்கல் குச்சிபாளையத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அல்லாது வேறென்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைக்க கூடாது என வாங்கல் குச்சிபாளையம் மக்கள் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.