நான் நினைத்திருந்தால்.. எவ்வளவோ செய்திருப்பேன்.. எச்சரித்த எடப்பாடி பழனிசாமி!
திருப்பத்தூர் : ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டு இருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை, மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றி வந்தோம். ஆனால் திமுக அப்படி இல்லை, பொய் வழக்கு போட்டு வருகிறது என்றார்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் ஹோட்டலில் அதிமுக கட்சிகள் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மற்றும் செங்கோட்டையன் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக தில்லுமுல்லு
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "திராவிட முன்னேற்றக் கழகம் தில்லுமுல்லு செய்தே ஆட்சியைப் பிடித்தது அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற திமுக தில்லுமுல்லு செய்யும் அதனை அதிமுகவினர் முறியடித்து வெற்றிப்பெற வேண்டும். அம்மா ஆட்சியில் சொன்ன வாக்குறுதியையும் செய்தது.சொல்லாததையும் செய்தது. அதனை மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

525 வாக்குறுதிகள்
ஓட்டுகள் பெறுவதற்காகவே பச்சை பொய் சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். கடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க சுமார் 525 தேர்தல் வாக்குறுதிகளை கூறினார். அதேபோல் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து எனக் கூறினார். கல்வி கடன்,விவசாய கடன் நகை கடன்,தள்ளுபடி என பல வாக்குறுதி அளித்தனர் ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.

கண்டிசன் அதிகம்
ஆனால் தற்போது கூட்டுறவு வங்கியில் மட்டும் விவசாய கடன், மற்றும் நகை கடன் தள்ளுபடி என திமுக அரசு அறிவித்து அதிலும் பல்வேறு கண்டிஷன்களால் பொதுமக்கள் பெரும் அவதி பட்டு வருகின்றனர். அம்மா கொண்டு வந்து சிறப்பான திட்டத்திற்கு மட்டும் தான் திமுக அரசு அடிக்கல் நாட்டி வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற 4மாத காலத்தில் இருந்து தற்போது வரை அதிமுக கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு மற்றும் அவதூறு பரப்பி வேலையை மட்டும் செய்து வருகிறது. மக்கள் நலனை யோசிக்கவில்லை!

எடப்பாடி பழனிசாமி கோபம்
நான் சுமார் நான்கு ஆண்டு இரண்டு மாதங்களாக முதலமைச்சராக இருந்தேன். நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டு இருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றி வந்தோம். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி பெற்று பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் திமுகவினர் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவார்கள் ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள் அதனை கருத்தில் கொண்டு மக்கள் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications