சிலை கடத்தல் டிஎஸ்பி தப்பி ஓட்டம்.. கேரளாவில் தலைமறைவா.. போலீசார் தேடுதல் வேட்டை
அருப்புக்கோட்டை சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி காதர் பாஷா கேரளாவிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், தமிழக போலீசார் கேரளவிற்கு விரைகின்றனர்.
சென்னை: சிலையை கடத்தி பணத்தை பங்கு போட்டுக் கொண்ட வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி காதர் பாஷா கேரளாவில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவருடைய விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது, ஐம்பொன் சிலைகள் 6 கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சிலைகள் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரே தாய்லாந்து நாட்டிற்கு கடத்தினர். 6 ஐம்பொன் சிலைகள் 6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன.
சிலை கடத்தலில் போலீசார்
இந்த சிலைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள முகவர் மூலம் தாய்லாந்திற்கு கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து டிஎஸ்பி காதர்பாஷா உள்ளிட்ட 4 போலீசார் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
போலீசாரின் தில்லுமுள்ளு அம்பலம்
2008ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது பரபரப்பாகியுள்ளது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசின் ஒப்புதல்
இந்தக் கடத்தலில் தொடர்புடைய எஸ்பி சுப்புராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிலை விற்கப்பட்டதும், அதன் மூலம் கிடைத்த பணத்தை டிஎஸ்பி காதர்பாஷாவுடன் பகிர்ந்து கொண்டதையும் ஒப்புக் கொண்டார்.
போலீஸ் அதிகாரி கைது
இதைத் தொடர்ந்து சுப்புராஜ் கைது செய்யப்பட்டார். டிஎஸ்பி காதர்பாஷா உள்ளிட்டவர்கள் மீதும் விசாரணை நடந்து வருகிறது.
நீதிமன்றம் கேள்வி
இந்நிலையில், டிஎஸ்பி காதர் பாஷாவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து காதர் பாஷாவை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
டிஎஸ்பி தப்பி ஓட்டம்
இதனைத் தொடர்ந்து, தன்னை எப்படியும் கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் காதர் பாஷா தலைமறைவாகிவிட்டார். அவர் தற்போது கேரளாவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீசாரிடம் சிக்கும் காதர் பாஷா
இதனை தொடர்ந்து, தமிழக போலீசார் கேரளாவிற்கு விரைந்து செல்ல தயாராகி வருகிறது. அங்கு மறைந்திருக்கும் காதர் பாஷா போலீசாரிடம் சிக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.