ஓசூர் நில அளவையர் குவளை செழியன் கொலை வழக்கு... தேடப்பட்ட இக்ரமுல்லா சரண்
ஆத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி நில அளவையர் குவளை செழியன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி இக்ரமுல்லா சேலம் ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
குவளை செழியன் கடந்த மே மாதம் 27-ந் தேதி காலை தனது மனைவியிடம் அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அப்போது அவரை ஒரு கும்பல் கடத்தி, ஒரு கோடி ரூபாய் பணம் கேடு மிரட்டியது.
பின்னர் குவளை செழியனை கொலை செய்து சேலம் தருமபுரி மாவட்ட எல்லையிலுள்ள கே.மோரூர் கிராமம் இராமமூர்த்தி நகர் என்ற இடத்துக்கு அருகிலுள்ள சாலையோர பள்ளத்தில் காருடன் சேர்த்து தீ வைத்து எரித்தது. இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் கொலையாளிகளில் ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் கைது
இவ்வழக்கில் தொடர்புடையதாக ஓசூரை சேர்ந்த பால்ராஜ் மனைவி கார்த்தியாயினி, அவருடைய ஆண் நண்பரான சேலம் செட்டிசாவடி பகுதியை சேர்ந்த இக்ரமுல்லா உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். ஆனால் இக்ரமுல்லாவோ தாம் குற்றவாளி அல்ல என்றும் தம்மை போலீஸ் தேடி வருவதால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் வாட்ஸ் அப்பில் தகவலை பரப்பி பீதியை கிளப்பினார்.

அடுத்தடுத்து கைது
இதனிடையே ஓமலூர் அருகிலுள்ள வெள்ளாளப்பட்டி, சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல், சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னவர், முருகன், பிரபு, சித்துராஜ், முத்து, ஓமலூர் காமலாபுரம் ஏர்போர்ட் காலனி இராஜா என அடுத்தடுத்து பலரையும் போலீசார் கைது செய்தனர்.

இக்ரமுல்லா சரண்
ஆனால் இக்ரமுல்லா கடந்த 55-நாட்களாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் திடீரென சரணடைந்தார். அவரை வரும் 29-ந் தேதிவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துமாறு நடுவர் இராமச்சந்திரன் உத்தரவிட்டதார்.

ஆண்டவன் மீது ஆணை...
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் இக்ரமுல்லா, ஆண்டவன் மீது ஆணையாக இந்த கொலை வழக்குக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. உண்மை என்ன என்பதை நான் ஆடியோவில் பேசி வைத்துள்ளேன். அது இன்னும் 2 நாட்களில் செய்தியாளர்கள் அனைவரின் கைகளுக்கும் வாட்ஸ் அப் மூலமாக வந்து சேரும் என மீண்டும் பீதியை கிளப்பிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications