பவானி ஆறு கூவத்தில் கலக்கலாமோ.. கூடாது.. விஜயகாந்த்தும் எங்களுடன்தான் சேர வேண்டும்- இளங்கோவன்
சென்னை: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரும்பினால் அவர் காங்கிரஸுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும். அப்போதுதான் அது முடியும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசுகையில், 'ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு கட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையி லான மத்திய அரசு. இதற்காக மேலும் சில சட்டங்களை நிறைவேற்ற இருக்கிறோம். ஊழல் செய்தவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்தது, மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால்தான் முடியும்.
தேமுதிக. சமீபத்தில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தியது. எனவே ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும். பவானி ஆறு காவிரியில்தான் கலக்க வேண்டும். கூவத்தில் கலக்க கூடாது. விஜயகாந்த் எனது நண்பர். அவர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஊழலை ஒழிக்க வேண்டும்.
ஆம்ஆத்மி கட்சி நடைபெறாத வாக்குறுதிகளை எல்லாம் கொடுத்து வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கிறது. கிடைத்த அதிகாரத்தை முறையாக பயன்படுத்த வில்லை. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அங்கு நிலைமை இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் அதை திசை திருப்ப மற்றவர்கள் மீதும் காங்கிரஸ் மீதும் குறை சொல்கிறார். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அந்த கட்சியை மக்கள் அந்த கட்சியின் சின்னமான துடைப்பத்தை வைத்தே விரைவில் விரட்டியடிப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications