வீதிக்கு வரும் சசிகலா குடும்ப சண்டை.. கிலி கிளப்பும் கிருஷ்ணபிரியா
சென்னை: சசிகலா குடும்பச் சண்டை வீதிக்கு வரப் போகிறது. இளவரசி மகள் மூலம் புதுச் சிக்கலைச் சந்திக்கப் போகிறதாம் அதிமுக தலைமை.
எடுப்பார் கைப்பிள்ளை நிலைக்குப் போய் விட்டது அதிமுக. இவர்களின் அக்கப் போரில் தமிழகத்தின் நலனமும், மானமும்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் சசிகலா குடும்பத்தினர் பதவிக்காக பற்பல விதமாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்துக்குள் தலையிடாமல் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகின்றனர் சசிகலா உறவுகள். அதிமுக என்றாலே பெண் தலைமைதான் என்பதைக் குறிக்கும் வகையில், இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் திவாகரன் கோஷ்டியினர். தினகரன் சிறையில் இருந்து வந்த அன்று, ' இனியொரு விதி செய்வோம் என அதிர வைத்திருக்கிறார் கிருஷ்ணபிரியா என்கின்றனர் அதிமுகவினர்.

இளவரசி குடும்பத்தை தொடாத ஜெ.
அதிமுகவில் இருந்து சசிகலா, நடராசன், தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் 2011-ம் ஆண்டு நீக்கப்பட்டபோதும், இளவரசியோ அவரது குடும்பத்தார் மீதோ ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனக்கு எதிராக இளவரசி குடும்பத்தினர் சதி செய்ய மாட்டார்கள். சொல்லும் வேலையைச் செய்து கொண்டு அமைதியாக இருப்பார்கள் என ஜெயலலிதா நம்பியதுதான் காரணம்.

இன்று வரையில்
அதற்கேற்ப, இன்று வரையில் 81, போயஸ் கார்டன் முகவரியில் இளவரசிக்கும், விவேக் ஜெயராமனுக்கும் மட்டுமே அ.தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டை இருக்கிறது. அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும், ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக பார்க்கப்பட்டவர் விவேக். அவருடைய சகோதரிகளும் கார்டனுக்குள் சர்வசாதாரணமாக சென்று வந்து கொண்டிருந்தனர். தற்போது ஜெயா டி.வி நிர்வாகத்தையும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் நிர்வாகத்தையும் விவேக் கவனித்து வருகிறார்.

கிருஷ்ணப்பிரியா அக்கா
அவரிடம் பேசுகின்றவர்கள், அம்மா உயிரோடு இருந்தவரையில் உங்கள் குடும்பத்தை எந்த வகையிலும் புறக்கணித்ததில்லை. நீங்கள் அரசியலுக்கு வந்தால், அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். எந்த சூழலிலும் அம்மாவின் கோபத்துக்கு நீங்கள் ஆளானதில்லை எனக் கூற, அதற்குப் பதில் அளித்த விவேக், நான் எப்போதும் போல நிர்வாகத்தை கவனிக்கவே விரும்புகிறேன். நேரடியாக அரசியலுக்கு வந்தால், தேவையற்ற விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறியிருக்கிறார். அதேநேரம், அவரது அக்கா கிருஷ்ணபிரியாவின் செயல்பாடுகள் முன்பைவிட வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றன" என விவரிக்கிறார் அதிமுக பிரமுகர் ஒருவர்.

கிருஷ்ணபிரியா பவுண்டேஷன்
கிருஷ்ணபிரியாவின் பெயரில் ஃபவுண்டேஷன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் மரம் நடுவிழா, பெண்கள் தினவிழா என தினம்தோறும் ஏதேனும் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக சமூக சேவையில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் பிரியா. நேற்று தினகரனுக்கு ஜாமீன் கிடைத்ததை வரவேற்கும் வகையில், 'இனியொரு விதி செய்வோம் என முகநூலில் பதிவு செய்திருந்தார்.

எதிர்காலம் பெண்கள் கையில்
அடுத்து, உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்விலா நிலை வேண்டும் எனப் பதிவு செய்திருந்தார். இறுதியாக, வேளச்சேரியில் நடந்த பெண்கள் தினவிழாவில் பேசிய கிருஷ்ணபிரியா, எதிர்காலம் என்பது பெண்கள் கையில்தான் இருக்கிறது. எப்படிப்பட்ட எதிர்காலத்தை நமது சந்ததிகளுக்கு விட்டுச் செல்கிறோம் என்பதுதான் முக்கியமானது. மாற்றத்தைக் கொண்டு வர பெண்களால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக ஆண்கள் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

எனக்கு ஆதரவு தாங்க
அதாவது, அரசியல் அதிகாரத்துக்குள் வர நினைக்கும் பெண்களுக்கு, ஆண் சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்பதைத்தான் கோடிட்டுக் காட்டினார். இளவரசி குடும்பத்தின் மீது ஜெயலலிதா காட்டிய பாசத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் பணியில் இளவரசி குடும்பம் ஈடுபட்டுள்ளது.

வீதிக்கு வரும் குடும்பச் சண்டை
தினகரன் ஆதரவு அணியில் விவேக் உள்பட இளவரசி குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்குப் போட்டியாக திவாகரன் ஃபவுண்டேஷனைத் தொடங்க இருந்தார் ஜெயானந்த். அதற்கும் சசிகலா முட்டுக்கட்டை போட்டுவிட்டார். இனி குடும்ப சண்டை வீதிக்கு வர இருக்கிறது" என்றார் அந்த அதிமுக பிரமுகர் விரிவாக.












Click it and Unblock the Notifications