சென்னையை மிரட்டும் காய்ச்சல்... மருத்துவமனைகளில் 2000 பேர் அனுமதி!
சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் 2000 பேர் காய்ச்சலால் பாதிக்கபப்ட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: டெங்கு மற்றும் பல்வேறு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் 2000க்கும் மேற்ட்டோர் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் மழையின் காரணமாகவும் தட்பவெப்பநிலை மாறுபாட்டாலும் டெங்கு உள்ளிட்ட பல வகை காய்ச்சல் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் 2000 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் 250 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். இவர்களில் 180 பேர் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். 27 பேர் டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்குவால் பாதிப்பு
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தினமும் 175 பேர் முதல் 250 பேர் வரை சிகிச்சை பெற வருகிறார்கள். இதில் 20 பேர் டெங்கு உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். தினமும் சராசரியாக 5 பேருக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.
29 பேருக்கு டெங்கு
ஸ்டான்லி மருத்துவமனையில் தினசரி 250 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருகிறார்கல். தற்போது 29 பேர் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக மட்டும் 12 யூனிட் உள்ளது. அதில் 8 யூனிட்டில் பெரியவர்களும் 4 யூனிட்டில் குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராயப்பேட்டையில்..
கீழப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 200 பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் 5 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தினமும் 150 பேரும் குரோம்பேட்டை மருத்துவமனையில் 50 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் சிறிய கிளினிக்குகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய்த் தொற்று பரவுகிறது
சிலநாட்களுக்கு முன்பு சேலத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை, சேலம், திருவண்ணாமலையில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என கூறினார். மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்கும் இக்காலகட்டத்தில் கூட சென்னையில் பல பகுதிகளில் குப்பைகள் வாரப்படாமல் கிடப்பதால் நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது.