கறுப்புப்பண விவகாரத்தில் சிதம்பரம் குடும்பத்துடன் சிறைக்கு செல்வது உறுதி.. ஹெச்.ராஜா பரபரப்பு பேச்சு
கறுப்புப்பண விவகாரத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு செல்வது உறுதி என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி: என்டிடிவியின் பிரணாய் ராய் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டாளி என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கறுப்புப்பண விவகாரத்தில் ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறைக்கு செல்வது உறுதி என்றும் அவர் கூறினார்.
அன்னிய செலாவணி விதிகளை மீறி என்டிடிவி நிறுவனத்துக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக அதன் துணை நிறுவனரும், நிர்வாக துணை தலைவருமான பிரணாய் ராய்க்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ நேற்று ரெய்டு நடத்தியது.
பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இந்தியாவில் உள்ள வங்கியில் ரூ.48 கோடி கடன்பெற்று அதை வெளிநாடுகளில் உள்ள அவர்களது நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகள் சோதனை
இதையடுத்து வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனர் பிரணாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர்களது வீடு உட்பட 4 இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ப.சிதம்பரத்தின் கூட்டாளி
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சியில் பாஜக தேசிய செயலாளர் ஹெ.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூட்டாளிதான் பிரணாய் ராய் என அவர் குற்றம்சாட்டினார்.
ப.சிதம்பரம் 2வது குற்றவாளி
2 ஜி ஊழல் வழக்கில் என்டிடிவியின் பிரணாய் ராய்தான் முதல்குற்றவாளி. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரண்டாவது குற்றவாளி என்றும் ஹெச் ராஜா குற்றம் சாட்டினார்.
குடும்பத்துடன் சிறைக்கு செல்வது உறுதி
மேலும் கறுப்புப்பண விவகாரத்தில் ப.சிதம்பரம் குடும்பத்துடன் சிறைக்கு செல்வது உறுதி என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார். ஹெச் ராஜாவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.