மார்க் குழுமம், ஸ்பெக்ட்ரம் திரையரங்கு உட்பட தமிழகம் முழுவதும் 33 இடங்களில் வருமான வரி சோதனை!
கட்டுமான நிறுவனமான மார்க் குழுமம் மற்றும் ஸ்பெக்ட்ரம் திரையரங்குகளுக்கு சொந்தமான 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
சென்னை : பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால் மற்றும் மார்க் குழுமத்திற்கு சொந்தமான 33 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த நவம்பர் 9ம் தேதி சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து தமிழகம் முழுவதும் 190 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி உள்ளிட்ட இடங்களிலும் 5 நாட்களாக சோதனை நடந்தது.
சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து சுமார் 300 பேரை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், ஜாஸ் சினிமாஸில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் தொடர்ச்சியாக இன்று சென்னை மற்றும் மதுரையில் 33 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
ஸ்பெக்ட்ரம் மாலில் சோதனை
சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் இன்று காலையில் திடீரென வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 அதிகாரிகள் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
கட்டுமான நிறுவனம் மார்க்
அதிகாரிகளின் சோதனையால் ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள எஸ் 2 சினிமாஸ் தியேட்டரும் மூடப்பட்டுள்ளது. இதே போன்று கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள மார்க குழும நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. பழைய மகாபலிபுரம் சாலையில் கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள மார்க் அலுவலகத்தில் காலை முதல் சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.
சோதனை வளையத்தில் கங்கா ஃபவுன்டேஷன்ஸ்
இதே போன்று படேல் குழுமம், கங்கா குழுமம் மற்றும் மிலன் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள கங்கா ஃபவுன்டேஷன்ஸ் நிறுவனத்திற்கு இன்று காலை வந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வரி ஏய்ப்புக்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று சோதனையிட்டு வருகின்றனர்.
மில்லேனியம் மாலில் சோதனை
சென்னையில் 21 இடங்களிலும், வெளி மாவட்டங்களில் 12 இடங்களிலும் வருமான வரி சோதனை நடக்கிறது. மதுரை மில்லேனியம் மாலிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இங்கும் 4 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. பினாமி சொத்து பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததையடுத்து இன்று வருமான வரி சோதனையில் சிக்கியுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் கட்டுமான நிறுவனங்களே என்பது குறிப்பிடத்தக்கது.