70வது சுதந்திர தினம்.. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார் ஜெ...
சென்னை: 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகத்துக்கு அப்துல் கலாம் விருதையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் நாட்டின் 70-வது சுதந்திர தின விழா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவரது காருக்கு முன்னால் மாநகர போக்குவரத்து போலீஸார் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.

கோட்டையில் முதல்வரை தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வரவேற்றார். அதைத் தொடர்ந்து முப்படைகளின் தென்பிராந்திய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஜெயலலிதா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே சுதந்திர தின உரையாற்றினார். இந்த விழாவில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, சட்டசபை தலைவர் தனபால், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் அப்துல் கலாம் விருதை சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சண்முகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

சுதந்திர தின விழாவையொட்டி கோட்டை மற்றும் காமராஜர் சாலை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications