இலங்கை நட்புநாடு என்பதை நிறுத்துக.. போர்குற்றம் மீது சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துக: கருணாநிதி
சென்னை: இலங்கையை நட்பு நாடு அழைத்துக் கொண்டிருக்காமல் அந்நாடு மீதான போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவிக் காலத்தில் நியமித்த, ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா தலைமையிலான விசாரணைக்குழு, சமர்ப்பித்துள்ள, 178 பக்க அறிக்கையில், 'இலங்கையில், உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தில், ராணுவம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நம்பத்தக்கவை; சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டால், ராணுவ வீரர்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டது நிரூபணம் ஆகலாம். இக்குற்றங்களை விசாரிக்க, இலங்கை சட்ட முறைக்கு உட்பட்ட, போர் குற்ற பிரிவை அமைக்க வேண்டும்.
கடைசி கட்டத்தில் பிடிபட்ட தமிழ் போர்க்கைதிகளை, ராணுவ வீரர்கள் கொலை செய்ததை காட்டும், ‘சேனல் 4‘ன் வீடியோ காட்சிகள் உண்மையானவை தான். சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும், தலைவர்களையும், படுகொலை செய்த சம்பவங்கள் குறித்து, தனி நீதிபதி விசாரிக்க வேண்டும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
போர்க்குற்ற புகார்கள் குறித்த விசாரணையில், சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற, ஐ.நா., பரிந்துரை ஏற்கத் தக்கது.Ó என மேக்ஸ்வெல் பரனகமா சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, நேற்று முன்தினம், இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இந்தியா மேற்கொள்ள வேண்டும் இலங்கை ராணுவம் போர்க் (cont) https://t.co/IqJfmUSucg
— KalaignarKarunanidhi (@kalaignar89) October 22, 2015
இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட குழுவே திட்டவட்டமாக அறிக்கை கொடுத்து, அந்த அறிக்கையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்திய அரசு இனியும் இலங்கையை நட்பு நாடு என்று கூறிக் கொண்டிருக்காமல், இலங்கை ராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப் படுகொலைகள் குறித்து சர்வதேச, நம்பகமான, சுதந்திரமான விசாரணையை நடத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.