தமிழர்களுக்கு தூக்கு நிறைவேற்றினால் இந்திய அரசே முழு பொறுப்பு: திருமாவளவன்
சென்னை: ஐந்து தமிழர்கள் மரண தண்டனைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டால் இந்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
கடந்த 2011ம் ஆண்டு இலங்கை கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் மூன்று இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்கள் 8 பேர் மீதும் போதைப் பொருள் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் இலங்கை வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு கொழும்பு நீதிமன்ற நீதிபதி பத்மாசூரனே முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எட்டுப்பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
தமிழக மீனவர்கள் ஐவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், போதைப்பொருள் வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மீது இலங்கை அரசு பொய் வழக்கு போட்டுள்ளது எனவும் மீனவர்கள் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையுடன் பேசி தமிழக மீனவர்களை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று கூறிய திருமாவளவன், தமிழர்கள் மரண தண்டனைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டால் இந்திய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications