காரணமில்லாமல் கைது செய்யப்படும் முஸ்லீம் இளைஞர்கள்... டி.ஜி.பி.யிடம் இந்திய தேசியலீக் புகார்
சென்னை: காரணமில்லாமல் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா அப்துல்ரகீம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அப்புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-.
பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் கிச்சான் புகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அம்பத்தூரில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய் யப்பட்டு வருகிறார்கள்.
நெல்லை, பழனி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதே போல சி.டி.எம். பொறுப்பை ஏற்று சட்ட ரீதியாக பணிகளை செய்து வந்த மண்ணடி அப்துல்லாவை நேற்று போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அழைத்து சென்றுள்ளனர். இதுவரை அவரை விடவில்லை.
எந்த காரணமும் இல்லாமல் முஸ்லிம் இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லும் போக்கை கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.