ரயிலில் பயணிகள் அதிக லக்கேஜ் எடுத்து செல்ல கட்டுப்பாடு - 6 மடங்கு அபராதம்
ரயில் பயணிகள் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீறினால் ஆறு மடங்கு அபராதம் விதிக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை: ரயில் பயணத்தின் போது ஒவ்வொரு பயணியும் எடுத்து வரும் பிரம்மாண்ட லக்கேஜ்களால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் கூடுதலாக லக்கேஜ் எடுத்துச்செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்களில் அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்க வகை செய்யும் விதிமுறை கடந்த 30 வருடங்களாக அமலில் உள்ளது. முதல் வகுப்பு படுக்கை வசதி கொண்ட வகுப்பில் பயணிப்பவர் 40 கிலோ வரை லக்கேஜை இலவசமாக கொண்டு செல்லலாம். கூடுதலாக 40 கிலோ சுமையை உரிய கட்டணம் செலுத்தி லக்கேஜ்கள் வைக்கும் கம்பார்ட்மெண்டில் எடுத்துச் செல்லலாம்.
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிப்பவர் 35 கிலோ வரை லக்கேஜை கட்டணமின்றியும், அதற்கு மேல் 70 கிலோ வரை லக்கேஜை உரிய கட்டணம் செலுத்தியும் எடுத்துச் செல்ல முடியும். ஏசி முதல் வகுப்பு பயணி 70 கிலோ வரையிலும், ஏசி இரண்டாம் வகுப்பு பயணி 50 கிலோ வரையிலும் லக்கேஜை இலவசமாக கொண்டு செல்ல முடியும்.
ரயில்வே துறையினால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு சென்றால் அபராதம் விதிக்கலாம் என்ற விதிமுறை 30 ஆண்டுகளாக அமலில் இருந்தாலும் அது தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதால் ஜயன்ட் சைஸ் சூட்கேஸ்கள், மூட்டைகளை பல பயணிகள் எடுத்து வந்து ரயில் பெட்டிகளில் அடைக்கின்றனர். இதனால் ஒரே ஒரு பெட்டியுடன் பயணிக்கும் சாதாரண பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக லக்கேஜ் எடுத்துச் செல்பவர்களுக்கு பார்சல் கட்டணத்தை விட 6 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் இந்த வாரம் முழுவதும் அதிரடி சோதனை நடைபெறுகிறது. சில பயணிகள் கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்வதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த விதிகளை தீவிரமாக அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையத்தில், பயணிகளின் அனைத்து உடைமைகளையும் எடை வைத்து வழங்கப்படுவது போல் அல்லாமல், ஆங்காங்கே சோதனைகள் நடத்தி பயணிகளின் கொண்டு வரும் லக்கேஜ்களின் எடையை ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என தெரிகிறது.
இனி விமான பயணம் போல ரயில் பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ்களை எடை போட்டு எடுத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களை போல, பயணிகள் கொண்டு வரும் கூடுதல் லக்கேஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் லக்கேஜ்களுக்கு முன்கூட்டியே புக் செய்து கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த லக்கேஜ்கள் லக்கேஜ்வேனில் வைக்கபடும் என்பதுதான் ரயில்வே விதியாகும்.ஆகவே, கட்டணம் செலுத்தாமல் இனி கூடுதலாக லக்கேஜ்களை கொண்டு வந்தால், அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டணத்தில் இருந்து ஆறு மடங்கு தொகை கூடுதலாக அபராதமாக விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.