எலிசபெத்தை விடுங்க... இந்தியாவிலேயே அதிக காலம் ஆட்சி புரிந்த மன்னன் யார் தெரியுமா?
சென்னை: இங்கிலாந்து ராணி எலிசபெத் இன்று வரலாறு படைக்கிறார். இங்கிலாந்து அரச வம்சத்திலேயே அதிக காலம் அரியணையில் இருந்த ராணி என்ற சாதனையை இன்று அவர் படைக்கிறார். இங்கிலாந்து நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு இந்த சாதனையை நிகழ்த்துகிறார் எலிசபெத்.
இன்று மாலை ஐந்தரை மணியளவில் ராணியாகப் பொறுப்பேற்று 63 வருடம், 7 மாதங்களை நிறைவு செய்கிறார் எலிசபெத். இது சாதனையாகும். இதற்கு முன்பு எலிசபெத்தின் கொள்ளுப் பாட்டியான ராணி விக்டோரியா 63 ஆண்டுகள் 7 மாதம், 2 நாட்கள், 16 மணிநேரம் மற்றும் 23 நொடிகள் ஆண்டிருந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது எலிசபெத் முறியடிக்கிறார்.
1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி ராணியாக பொறுப்பேற்றார் எலிசபெத். அவரது தந்தையான 5ம் ஜார்ஜ் மன்னர் மறைவுக்குப் பின்னர் ராணியானார் எலிசபெத். இது இருக்கட்டும்.. நம்ம ஊரில் யார் அதிக காலம் ஆட்சி புரிந்த மன்னர் என்ற கதை உங்களுக்குத் தெரியுமா... வாங்க கொஞ்சமாவது தெரிஞ்சுக்கலாம்.
மாமன்னன் கரிகாலன்
இந்தியாவிலேயே அதிக காலம் மன்னராக இருந்தவர் மாமன்னன் கரிகாலன் என்று ஒரு தகவல் கூறுகிறது.
"அஞ்சில் முடிகவித்து ஐம்பத்து மூன்றளவில்
கஞ்சிக் காவேரி கரை கண்டு - தஞ்சையிலே
எண்பத்து மூன்றளவும் ஈண்ட விருந்தேதான்
விண்புக்கான் தண்புகார் வேந்து" என்ற கரிகால் பெருவளத்தானின் ஆட்சிக்காலத்தைப் போற்றிப் பாடும் பாடலில் 83 ஆண்டு காலம் கரிகால் சோழன் தனது தரணியை ஆண்டதாக கூறுகிறது.
5 முதல் 83 வரை
5 வயதில் மன்னராக பதவியேற்றார் கரிகால் மன்னன். 83 ஆண்டுகள் அவர் ஆட்சி புரிந்ததாக அந்த வரலாறு கூறுகிறது. இவர் தனது 53வது வயதில் காவிரியில் கரை எழுப்பி கல்லணையைக் கட்டிய பெருமைக்குரியவர்.
மிகிரகுல ஹூணர்
அதேபோல காஷ்மீரை ஆண்டை மிகிரகுல ஹூணர் என்ற மன்னர் 70 ஆண்டுகள் தனது தரணியை ஆண்டதாக வரலாறு கூறுகிறது.
2ம் நந்திவர்ம பல்லவன்
அதேசமயம், நம்மிடம் உள்ள வரலாற்றுச் சான்றுகளின்படி பார்த்தால் பல்லவ மன்னரான 2ம் நந்தி வர்மன்தான் 65 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக சான்றுகள் கூறுகின்றன.
அமோகவர்ஷன்
ராட்டிரகூட மன்னரான அமோகவர்ஷன் என்ற மன்னர் 64 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக வரலாற்றுத் தகவல்கள் உள்ளன.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மன்னர் இமயவரம்பன் நெடுஞ்சேரலதான் 58 ஆண்டுகள் தனது தரணியைக் கட்டி ஆண்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. இவனது ஆட்சி பொற்காலமாக திகழ்ந்ததாகவும் சான்றுகள் கூறுகின்றன.
சேரன் செங்குட்டுவன்
சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் சேர மண்ணை 55 ஆண்டுகள் ஆண்டு சிறந்த ஆட்சியைத் தந்ததாக ஆவணங்களும், சான்றுகளகும், பாடல்களும் கூறுகின்றன.
குலோத்துங்க சோழன்
சோழர்களில் முக்கிய மன்னர்களில் ஒருவரான குலோத்துங்க சோழன் தனது நாட்டை 50 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்ததாக இன்னொரு தகவல் நம்மிடம் உள்ளது.
மாவீரன் எல்லாளன்
இலங்கையை நீண்ட காலம் ஆட்சி புரிந்த மன்னரான எல்லாளன் 44 ஆண்டுகள் சீரிய ஆட்சி புரிந்தது வரலாறு. சிங்களத்தை தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த மாமன்னன் எல்லாளன் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுந்த நீதிமானாக, சிறந்த ஆட்சி செய்தவனாக இவனை சிங்களது மகா வம்சமே போற்றுகிறது.
அனுராதபுர மன்னர்கள்
அனுராதபுரத்தை ஆட்சி செய்த 19 மன்னர்களில் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேலும் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. அதில் எல்லாளனின் காலம் மட்டும் 44 ஆகும். அவனது தந்தை ஈழசேனன் 22 வருடம் ஆட்சு பிரந்தவர் ஆவார்.
உலக வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள்
உலக அளவில் எடுத்துக் கொண்டால் எகிப்து நாட்டைச் சேர்ந்த பெபி என்ற மன்னர்தான் அதிக ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இறருந்த மன்னராக கருதப்படுகிறார். அவர் 94 வருடம் ஆட்சி புரிந்ததாக கூறப்புகிறது.
வரலாற்றுத் துயரம்
மேலை நாடுகளில் அரச வம்சங்கள் குறித்த ஆவணங்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல அரச வம்சத் தகவல்கள் சுத்தமாக நம்மிடம் இல்லாமல் போனது வரலாற்றுத் துயரம்தான்.