தென்மேற்கு பருவமழை தீவிரம் - அணைகளில் நீர்மட்டம் உயர்வு
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய தொழிலே பிரதானமாக நடந்து வருகிறது. இந்த இரு மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் பாபநாசம் அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் 86107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46107 ஏக்கரும் அடங்கும். தென் மேற்கு பருவமழையின் மூலம் கார் பருவ சாகுபடியும், வடகிழக்கு பருவமழையின் மூலம் பிசான பருவ சாகுபடியும் நடக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்ததால் பிசான நெல் சாகுபடி சரியாக நடக்கவில்லை. இதனால் தென் மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ஜூன் 1ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்ப குதியில் தொடர்ந்து சாரல் பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
143 அடி கொண்ட பாபநாசம் அணையில் 51.20 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 2 உயர்ந்து 53.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1765 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கு அணைப்பகுதியில் 6 மிமீ மழை பதிவாகியுள்ளது.
156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக இருந்தது. தற்போது அது 7 அடி உயர்ந்து 72.83 அடியாக உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.39 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது.
கடனாநதியின் அணை பகுதியில் 4.5, குண்டாறு 21, அடவி நயினார் அணை 25 மிமீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருந்து அணைகளில் நிரம்பினால் மட்டுமே கார் பருவ நெல் சாகுபடியை தொடங்க முடியும் என்ற நிலையில் விவசாயிகள் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications