கர்நாடக மழையால் கரைபுரளும் காவிரி.. ஒகேனக்கலில் நீர்வரத்து 17000 கன அடியாக உயர்வு! பரிசல் இயக்க தடை!
தருமபுரி: கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. விநாடிக்கு 25,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தமிழ்நாடு கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 17,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 12 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் தற்போது 17 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. நீர் வரத்து அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் பகுதியில் விநாடிக்கு 5,000 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 6,000 கனஅடியாக நீர்வரத்து கூடியது. மேலும், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இரவு முதல் இந்த நீர்வரத்து வெகுவாக உயர்ந்து தற்போது விநாடிக்கு 17,000 கன அடி என்ற அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications