டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுவது குற்றமா? காவல்துறைக்கு ஹைகோர்ட் 'நறுக்' கேள்வி
சென்னை: "மதுக்கடைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குற்றமா? அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஏன்?" என ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
'நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் மதுபானக்கடைகள் இருக்கக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க உத்தரவால், தமிழக அளவில் 3,303 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகளை மறுபடியும் வேறு இடங்களில் கொண்டு வர தமிழக அரசு முயன்றது. மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசு திறக்க முயன்றது.
நாம் தமிழர் போராட்டம்
சென்னை திருமுல்லைவாயலில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிரசன்னா என்பவரின், தாயார் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றமா?
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், "மதுக்கடைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது குற்றமா? அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
ஜாமீன் கொடுப்பேன்
கைது செய்யப்பட்ட 21 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஜாமீன் மனுவாக தாக்கல் செய்தால், நாளையே அதை விசாரித்து ஜாமீன் வழங்குவதாக கூறிய நீதிபதி, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முக்கிய அறிவிப்பு
மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக்கூடாது என உத்தரவு நாளை பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருமுல்லைவாயில் காவல்துறை இன்ஸ்பெக்டரையும், நாளை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.