மகனை மேயராக்கி அழகுபார்க்க நினைக்கும் ஜெயக்குமார்... களப்பணிகள் தீவிரம்
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தனது மகன் ஜெயவர்தனை சென்னை மாநகராட்சி மேயராக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளதால் இப்போதே அதற்கான களப்பணிகளை தொடங்கிவிட்டார்.
திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்க்க முன்னாள் எம்.பி.ஜெயவர்தன் ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில் சென்னை மாநகர அதிமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசை வெயிட்டாக கொடுத்து அசத்தியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
உள்ளாட்சித் தேர்தல்
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
அமைச்சர் மகன்
சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் மகன் ஜெயவர்தனை களமிறக்க திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக நிர்வாகிகளை இப்போதே தன் வசப்படுத்தும் பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
களப்பணி
திமுக சார்பில் நூற்றுக்கு தொன்னூறு சதவீதம் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பையும், கடும் போட்டியையும் உருவாக்கியுள்ளது.
ராஜேஷ்
இதனிடையே மதுசூதணின் தீவிர ஆதரவாளராக வலம் வரும் ராஜேஷூக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பதவி மீது ஒரு கண் உண்டு. அவர் மற்றும் ஜே.சி,டி,பிரபாகர் ஆகியோரும் மேயர் சீட் ரேஸில் ஜெயக்குமார் மகனுக்கு போட்டியாக நிற்கிறார்கள்.