பிரதமர் கனவு: ரிஷி பஞ்சமியில் தொடங்கி திரிதியை வரை... ஜெ.வின் ஜோதிட நம்பிக்கைகள்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற வேண்டும் என்பது ஆசை.
மூன்று முறை குஜராத்தில் முதல்வராக இருக்கும் தனது நண்பர் நரேந்திர மோடி பிரதமராக ஆசைப்படும் போது அதேபோல தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள தானும் பிரதமர் ஆகக்கூடாதா என்று யோசித்தார்.
அதன் விளைவுதான் லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சிறப்பு வாய்ந்த திதி, நட்சத்திர நாட்களில் அமைந்தது.
ரிஷி பஞ்சமியில் ஆலோசனை
தமிழ் மாதமான ஆவணி மாத விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி 'ரிஷி பஞ்சமி' என்றே போற்றப்படுகிறது. அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுகிறவர்கள் வாழ்வில் நலம் பல பெருகும் என்பது நம்பிக்கை. கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் ரிஷி பஞ்சமி நாளில் லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனையை தொடங்கினார் ஜெயலலிதா.
திருவோணத்தன்று தேர்தல் பணிக்குழு
இதைத் தொடர்ந்து ஆவணி மாதம் திருவோணம் தினத்தன்று அதாவது செப்டம்பர் 16ம் தேதி 40 லோக்சபா தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழுவை நியமித்தார்.
மார்கழியில் மனுவிற்பனை
தேர்தல் எப்போது என்று தெரியாத நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் முதன்மையாக டிசம்பர் 19ம் தேதி அதாவது மார்கழி 4ம் தேதி பவுர்ணமி முடிந்த மூன்றாம் நாள் அதிமுகவில் வேட்பாளர்கள் விருப்பமனு விற்பனை செய்யப்பட்டது.
தசமியில் வேட்பாளர்கள் அறிவிப்பு
பிப்ரவரி 24 பிறந்தநாளன்று தசமி திதியில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. தசமி என்பது வெற்றியின் நாள். விஜய தசமிதினம் அதனை சிறப்பிக்கும் வகையிலேயே கொண்டாடப்படுகிறது. லோக்சபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 40 தொகுதியிலும் வெற்றி வாகை சூடவேண்டும் என்றே அன்றைய தினம் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார் ஜெயலலிதா என்கின்றனர்.
ஏகாதசியில் தேர்தல் அறிக்கை
ஜெயலலிதா சிறந்த விஷ்ணு பக்தை. அதனால்தான் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீ ரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். அதேபோல பெருமாளுக்கு உகந்த நாளான ஏகாதசி நாளில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
திரிதியை திதியில் தேர்தல் பிரச்சாரம்
அமாவாசைக்கு பின்னர் மூன்றாம் நாள் வரை திரிதியை திதி விசேசமானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் தொடங்கப்படும் காரியங்கள் வளர்ச்சியடையும் என்பது நம்பிக்கை. அதனால்தான் மாசி மாதம் வளர்பிறை திரிதியை நாளில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.
பிரதமர் கனவு நனவாகுமா?
ஆள் செய்யாத காரியங்களை நாள் செய்யும் என்பார்கள். லோக்சபா தேர்தலுக்காக ஜெயலலிதா மேற்கொண்ட ஒவ்வொரு ஒவ்வொரு செயல்பாடுகளும் நல்ல நாள், நட்சத்திரம், திதி பார்த்தே செய்துள்ளார். நாற்பது தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றுமா? அவரது பிரதமர் கனவு நிறைவேறுமா?. ஜெயலலிதாவின் ரெட் போர்ட் எக்ஸ்பிரஸ் டெல்லி செங்கோட்டையை சென்று சேருமா? போன்ற கேள்விகளுக்கு மே மாதத்தில் விடை தெரிந்துவிடும்.