மக்களின் செல்'வாக்கு' ஜெயலலிதாவிற்கா, இரட்டை இலைக்கா?... இன்று தெரிந்து விடும் முடிவு!
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக என்னவாகும் என்ற கேள்விக்கு இன்று ஆர்கே நகர் தேர்தலில் மக்கள் முடிவு சொல்லப் போகிறார்கள்.
சென்னை : ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும், இரண்டாக மூன்றாக பிரிந்து கிடக்கும் கட்சி பற்றி மக்கள் நினைப்பது என்ன என்ற இவை யெல்லாவற்றிற்குமான முடிவாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. நாடே எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிய வந்தவிடும்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஒரு தேர்தல். ஒரு பக்கம் நாட்டில் எங்குமே நடக்காத வகையில் இங்கு பணப்பட்டுவாடா என்பது ஜனநாயகத்தையும், தேர்தல் ஆணையத்தையும் கேலிக்கூத்தாக்கியது. பிளவுபட்ட அதிமுக இடையில் ஏற்பட்ட போட்டி காரணமாக பணப்பட்டுவாடாவும் தறி கெட்டு நடந்தது.
கட்டுப்படுத்தவே முடியாத நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம்,இந்த முறையும் தேர்தலை நடத்தினால் அது மிகப்பெரிய அவமானம் என நினைத்து தேர்தலை நடத்தியுள்ளது. வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடி சூறை, தகராறு என்ற பிரச்னைகள் இல்லாமல் சுமூகமாக நடந்தது வாக்குப்பதிவு.

பெண்கள் அதிக அளவில் வாக்கு
ஆண்களை விட இந்த முறை பெண்களே இந்த தொகுதியின் எம்எல்ஏவை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். பதிவான 77.68 சதவீத வாக்குகளில் பெண்கள் 79.21 சதவீதமும், ஆண்கள் 75.92 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.

விட்டு கொடுத்த வெற்றிவேல்
1991ம் ஆண்டு முதல் அதிமுகவின் கோட்டையாக ஆர்கே நகர் தொகுதி விளங்குகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்ற அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் ஆணைய விதிப்படி அவருடைய எம்எல்ஏ பதவி பறிபோனது. எனினும் நீதிபதி குமாரசாமி தீர்ப்பால் அவர் விடுதலையாகி வெளியே வந்த பின்னர், மீண்டும் போட்டியிட் முடிவு செய்தார்.

ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்த மக்கள்
அப்போது 2015ல் அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேல்( தற்போது தினகரன் அணியில் இருப்பவர்) எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அங்கு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் ஜெயலலிதா அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆர்கே நகரில் செல்வாக்கு படைத்த அதிமுக
சுமார் 20 ஆண்டுகளாக அதிமுகவை இந்தத் தொகுதியில் வீழ்த்தவே முடியாது என்ற அரசியல் வரலாறு உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான தொகுதி மக்களின் அபிமானவே தொடர் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மறைந்த பின்னரும் அவருக்கான செல்வாக்கு இன்னும் மக்கள் மத்தியில் இருக்கிறதா.

தற்போதைய நிலவரம் என்ன?
அதிமுகவின் மதுசூதனன் அணி பெற்ற இரட்டை இலை சின்னத்திற்கான மவுசு இன்னும் மக்கள் மத்தியில் இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு இன்றைய தேர்தல் முடிவுகள் பதில் சொல்லப்போகின்றன. ஆர்கே நகர் மக்கள் ஆளும் கட்சியை அங்கீகரிக்கின்றனரா அல்லது அதிமுகவை எதிர்த்து நிற்கும் தினகரனை ஆதரரிக்கின்றனரா, அல்லது இந்த போட்டிகளைப் பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சி வரவேண்டும் என்று நினைக்கிறார்களா என்ற கேள்விகளுக்கான விடை இன்று கிடைக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications