முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டால என்ன பயன் இதுல ரெண்டாவது?... மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறதா அரசு?
2015ம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினாலேயே என்ன பயன் என்று அரசு தெளிவுபடுத்தாத நிலையில் ரூ. 75 கோடி செலவில் 2வது மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2015ம் ஆண்டில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடே பயன்தராத நிலையில் 2019ல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு பயன் அளிக்குமா. அல்லது இதுவும் அரசு தன்னுடைய கவுரவத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலா என்ற கேள்வி எழுகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 2015ம் ஆண்டில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது உலக முதலீட்டாளர்கள் மாநாடு. சுமார் ரூ. 100 கோடி செலவில் மாநாட்டிற்கு திட்டமிடப்பட்டு ரூ. 200 கோடி செலவில் வெற்றிகரமா நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் மூலம் ரூ. 2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய 98 புரிந்துணர்வு ஒப்பந்தர்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், 4.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால் இந்த மாநாட்டில் கையெழுத்திட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

வெளியேறிய தொழிற்சாலைகள்
இதே போன்று கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து ரூ. 86,000 கோடி முதலீடுகள் வெளிமாநிலங்களான தெலுங்கானா, குஜராத், மஹாராஷ்ரை கர்நாடகாவிற்கு சென்றுவிட்டதாக பாமக குற்றம்சாட்டுகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் இல்லை என்பதால் கடந்த 3 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் பாமக கூறியுள்ளது.

தெளிவுபடுத்தாத அரசு
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் எவ்வளவு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன என்று மக்களின் சார்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. அறிக்கைகள், அறிவிப்புகள் வெளியிடுவதை விட்டுவிட்டு உண்மை நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கேட்டுள்ளார்.

அரசின் பெருமைக்காகவா?
ஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதில் குறியாக இருக்கும் அரசு ஏற்கனவே நடத்தி முடித்த மாநாட்டால் என்ன பயன் என்பதை இதுவரை விளக்கவே இல்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசின் சாதனை என்ற பட்டியலில் இடம்பெற வைப்பதற்காக நடத்தப்படுகிறதா?

அல்லாடும் அரசு
போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதியில்லை, மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என்று ஏற்கனவே பணியில் இருக்கும் அரசுத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி பேருந்து கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.

மாநாட்டால் பயன் இருக்கிறதா?
இந்நிலையில் தான் ரூ. 75 கோடி செலவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது பாராட்டத்தக்க விஷயமே ஆனால் ஏற்கனவே கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து நடத்திய மாநாட்டால் என்ன பயன் என்பதை கூறி விட்டு இந்த மாநாட்டை அரசு நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.












Click it and Unblock the Notifications