ஆபீஸுக்கு ஒரு நாள் லீவு போட்டு போனாலும் ஜியோ சிம் கிடைக்க மாட்டேங்குதே!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ஆரணி உள்ளிட்ட தமிழக நகரங்களில் ஜியோ இலவச சிம் கார்டு கிடைக்காமல் மக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்தார். ஜியோ சிம் வாங்கினால் 3 மாதங்களுக்கு 4ஜி நெட் பேக், அழைப்புகள் இலவசம் என்று மேலும் அறிவித்தார்.
இதையடுத்து ஜியோ சிம்மை வாங்க மக்கள் கடைகளில் அலைமோதுகிறார்கள். 4ஜி போன் வைத்திருப்பவர்கள் ஜியோ சிம்மிற்கான அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கடைகளுக்கு சென்றால் சிம் கார்டு இல்லை நாளைக்கு வாங்க என்கிறார்கள் கடைக்காரர்கள்.
திருவண்ணாமலை, ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யார் ஆகிய நகரங்களில் ஜியோ சிம் வாங்க கடந்த 20 நாட்களாக கடைகளுக்கு நடையாய் நடந்தது தான் மிச்சம் கார்டு கிடைக்கவில்லை.
எப்பொழுது பார்த்தாலும் சிம் கார்டு இல்லை நாளைக்கு வாங்க, நாளை மறுநாள் வாங்க என்று கடைக்காரர்கள் கூறுவதை கேட்டு மக்கள் கடுப்பாகியுள்ளனர்.
என்னய்யா சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காத கதையாக இருக்கிறதே என்று மக்கள் நொந்து கொள்கிறார்கள். இது குறித்து சிம் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில்,
கிராக்கி இருப்பதை அறிந்து முதலில் நிறுவனமே சிம் கார்டுகளை வேண்டும் என்றே தாமதமாக அனுப்பியது. பின்னர் நிறுவனம் ஒழுங்காக கார்டுகளை அனுப்பும்போதிலும் சில கடைக்காரர்கள் அதை இலவசமாக கொடுக்காமல் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு சிம்மை ரூ.200 முதல் 300 வரை விற்கிறார்கள்.
பணத்திற்கு சிம் கார்டு விற்கப்படுகிறது என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்கிறார் சிம் கார்டு விற்பனையாளர் ஒருவர். முதலில் சிம் கார்டு வாங்கியவர்களுக்கு அது ஆக்டிவேட் ஆகவில்லை. ஆதார் கார்டை கொடுத்து கைரேகையை பதிவு செய்தால் சிம் கார்டு ஆக்டிவேட் ஆகும் இயந்திரத்தை நிறுவனம் கொடுத்துள்ளது. அந்த இயந்திரம் வேலை செய்யாததால் கார்டுகள் கிடைக்கவில்லை என்றார்.